Saturday, June 25, 2011

ஆமை ஓடு காதல்!!!



சிறகுகள் உதிர்ந்து முளைக்கிறது நிதம் நிதம்
வளர வளர தோல் உரிக்கிறேன்!
வெள்ளையாகவும் கறுப்பாகவும் வெள்ளியும் தங்கமுமாக
மிதக்கும் பகல்களில் ஊர்கிறேன் !!!
நடக்கும் இரவுகளில் பறக்கிறேன் !!!

உள்ளுக்குள் எங்கேயோ ஒரு இடம்
உலையாய் தகித்து கொண்டிருப்பதேனோ!!!
கொதித்து கொப்பளிப்பதன் வலி எங்கு தெறிகிறது
தெரியாத தேடல் என்னிடம்!!!
இதயம் வெறும் கடிகாரம் என்றால்
மனது எங்கே நிற்கிறது?
மூளையின் உள்ளேயா!!!

இத்தனை குழப்பத்தின் முனையிலும்
எந்த இடத்தில் உணர்கிறேன் என் காதல்களை
என்று தெரியாது திரிகிறேன்..
சிதையும் உடலுக்குள் எங்கெங்கு என் மனது திரிந்தாலும்
மனதின் மேலே உடையா ஓடு வேய்ந்து
வலம் வரும் வரம் எனக்கு!!!

பசுமை காதல் எப்போதாவது எட்டிப்பார்க்கையில்
நானும் நீட்டுகிறேன் ஓட்டின் உள்ளிருந்து என் மனதை!
நீ பேசும் வார்த்தைகளை உண்டு,
உன் சிரிப்பை குடித்து வளர்க்கிறேன் என்னை...
மெதுவாய் கலங்கும் உன் பிரிவை தூரப்பார்க்கையில்
இதோ சுருக்கிக்கொள்கிறேன் என் மனதை...
இன்னும் ஒரு காதல் எட்டி பார்க்கும் வரை!!!

Friday, May 13, 2011

கறையாகி கரைகிறேன்!!!

சொல்ல நினைத்து சொல்லாமல் விடுபட்டவை
படபடக்கிறது கண்ணீருக்குள்!
கேள்வி குறிகளை மேலே வைத்து பறந்துவிடாமல்
பார்த்து நிற்கிறேன் என்வீட்டு கூரையை...
கடந்து வந்த காலத்தின் கருமை மேனியில் படர்ந்து
நானும் நிற்கிறேன் இப்போதெல்லாம் நிழலாய்!

உன்னிடமும் அல்லாது வேறு யாரிடம் கொண்டு சேர்ப்பது
என் பயத்தின் நரம்பால் பின்னிய மூட்டையை!
அதற்குள் கிடப்பது கடந்து வந்த காலத்தின் தடயங்கள் தாங்கி
நரையும் மூப்பும் கலந்து தழும்பாகி போன ஒரு நான்!
முதன்முதல் உன்னை பார்த்தப்பின் மெல்ல
உரித்து போட்டேன் அந்த என்னை..
இப்பவும் அணிந்து கொள்ள சொல்லி கெஞ்சுகிறது
மெல்ல மூட்டையின் உள்ளிருந்து!

உன்னோடு இல்லாத பொழுதுகளில்
வந்து சேரும் பயம் கலந்து முதுகில் சுமக்கும்
பொதி வளர்ந்துகொண்டே இருக்க...
உன் கண் பார்க்க நேரிடுகையில் இறந்து பூக்கிறது!

எங்கு தொடங்கி எங்கு முடிந்ததோ
தெரியாது தேடுகிறேன் என் பகலை!
வருடங்கள் தாண்டி சென்றதில் எங்கோ
தொலைந்திருக்கக்கூடும் வெளிச்சம்...
வலிமட்டும்தான் இருப்பதன் ஒரே உணர்வாகி இருக்க
எங்கிருந்து வாழ்க்கையை திருத்தி எழுத
என்று தெரியாது விழிக்கிறேன்.

தினம்தினம் பிறக்கும் என் உடலோடு என் மனது
ஒன்றுபடாத வினாடிகளில்
விகாரங்கள் கட்டித் தழுவுகிறது...
நிழலுமாகி கறையுமாகி
கரையும் வேளைகளில் மட்டும்
இறந்து போகிறேன்...
மீண்டும் உன் கண் பார்க்கும்வரை!

Monday, April 11, 2011

நெருடல் ஆகிறேன்!!!



பிறந்தது தொட்டு கதைகளில் மட்டுமே வசித்து வருகிறேன்!
தவழ்ந்ததும் ஓடியதும் ரசித்ததும் புத்தகங்களுக்குள்ளேயே..
பக்கத்துக்கு பக்கம் மாறும் கதைக்குள்ளே
நடந்து செல்லும் மாளிகைகளும்
கீழிருந்து மேல் எழும்பும் அருவிகளும்
வாய் பேசும் மரங்களும், பறக்கும் மலைகளும் நிறைய!

ஓடும் என் மாளிக்கைக்குள் எல்லாமே புத்தகங்கள்!
கதைக்குள் கதையாக, பக்கங்களை தாண்டி
இன்றொருவனின் சிரிப்புக்கு நடுவே புகுந்து
நாளை ஒருவனின் கோபத்துக்கு இடையே வளைந்து
மற்றொரு நாள் சிலரின் அழுகையின் ஊடே புதைந்து போகிறேன்!

தினம் விளையாட தோழமைகளுண்டு!
தினம் மிதக்க காதல்களும் உண்டு!
தினம் விதவிதமான கலவிகளும் உண்டு!
பிறப்புக்கள் உண்டு! இறப்புக்களும் உண்டு!
ஒரு கதையில் மரணித்து, இன்னொரு கதையில் பிறக்கிறேன்!
ஒரு கதையில் வாளிட்டு, மற்றொரு கதையில் பிரார்த்திக்கிறேன்!

இன்னும் எத்தனை நாள் இப்படியே போகும்...
சலசலக்கும் என் புத்தகத்தின் எழுத்துக்கள்!
மடித்து நீட்டிய இரவுகளின் நீளம்
காகிதத்தில் கோடுகளாய் ஒடும்...
சொல்ல மறக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை
குவிந்து மூலையில் வளர்ந்து கொண்டே...

விட்டு செல்பவர்கள் எல்லோரும் விட்டே செல்கிறார்கள்
என் புத்தகத்தின் ஓரத்தில் மடித்ததன் அடையாளத்தை!
என்ன நடப்பினும் மிஞ்சி என் கதைகளில் பிரயாணிப்பது
நானும் என் உடைந்த மாளிகைகளும் மட்டுமே!
புத்தகத்தின் ஓரங்களிலும், புகுந்து செல்வோர் வாழ்விலும்
நெருடல் மட்டுமே ஆகிப்போகிறேன்!

Thursday, March 24, 2011

மெர்க்குரியானவன்!


சில வேலைகளில் ஸ்தம்பிக்கிறேன்...
நொடிக்கு நொடி இறந்து பிறக்கும் உலகை பார்த்து..
நான் என்ற நான் மட்டும் சப்தமின்றி இயங்கி வந்தேன்!
என் உலகம் சிரிப்புகளும் அழுகைகளும் தாண்டிய உலகம்...
வெற்றிடத்தில் மிதப்பதை ரசித்திருக்கிறேன்!
எதுவும் தொடா இடத்தில் நான் சஞ்சலங்களை
தாண்டியபடி மிதக்கையில், அது!

கருப்பு பட்டாம்பூச்சி சிகப்பு கண்களோடு
என்னையே சுற்றி சுற்றி...
பட்டாம்பூச்சியின் கருப்புதிர்ந்து விழ
காதலனாகி எழுகிறது அது!
தொட்டால் உள்ளிழுக்கிறான்!
என் மேல் விழுந்து நானாகிறான்!
விலக்கி விடுகையில் பல்லாயிரம் அவனாக சிதறி
என் கண்முன்னே ஒரு அவனாகிறான்...

நான் தொடும் பொருளாய் மாறுகிறான்!
நடக்கும் பாதையாய் மாறுகிறான்!
வளைந்து குழைந்து வானின் வண்ணம் ஆகிறான்!
மேலே விழுந்து உடல் தொட்டு செல்லும் மழை ஆகிறான்!
வெற்றிடம் தகதகக்க
என் உலகங்கள் ஆகிறான்!

சுற்றி நிற்கும் ஐம்பெரும் பொருளாகி
என்னுள் கலந்து கரைத்து காணாமல் போனவன்
வந்த விநாடி தொடங்கி வாழ்க்கை
கருப்பு வெள்ளைகளுக்கும் வண்ணங்களுக்கும்
இடையே தெறித்து ஓடிகொண்டிருக்க
வேண்டாம் என்றவன் வேண்டி ஒட்டிகொள்ள
மொத்தமாய் வேரறுத்து
என் உலகை எடுத்து செல்லுவான் ஒரு நாள்
அன்று நிற்பேன் நானும் பாதரசமாய்!

Friday, February 25, 2011

வெற்றிடம் தேடி!!!



தேடியபடியே கழியுமோ என் பொழுதுகள்...
புதிதாய் முளைத்திருக்கும் பதியங்களையும்
இறந்து அழுகும் சிலவற்றையும் புதைக்க இடம் தேடியபடி!
பார்க்கும் என் வெளி முழுக்க கல்லறை தோட்டம்...
மனதுள் வெற்றிடம் அற்று போய்விட்டது ஏனோ?

கண்கள் பார்த்ததில் விதை விழுந்து,
மெல்ல சிரிக்கையில் துளிர்விட்டு,
பேசி புரிததில் தளிர்த்து,
ரசித்து ருசித்ததில் இளவண்ணங்கள் தாங்கி,
அழகாய் வளர்ந்து நிற்கிறது
ஒருபுறம்
என் காதல்கள்!

பிடித்ததன் காரணங்கள் மறந்து
பேசுவது குறைமட்டும் கூற என்று ஆகிப்போய்
கேள்வி இல்லா கோபங்கள் தாங்கி
அன்பும் அமைதியும் குப்பையில் போட்டு
ஆசையையும் கொன்றதில்
இறந்து அழுகி போகிறது
ஒருபுறம்
என் காதல்கள்!

இறப்பும் பிறப்பும் காலசுழற்சி
என்பது புரிந்துவிடுகிறது!
காதல்களுக்கும் அவை உண்டென்பதை
மெதுவாக உணர்கிறேன்...
வெற்றிடம் தேவை!
இறந்த வயதான காதல்களையும்
இதோ கண்முன் பிறக்கின்ற காதல்களையும்
சுமந்து நிற்கிறேன்
புதைக்க இடம் தேடியபடி!

Wednesday, January 5, 2011

இதன் பெயர் பெண்ணியமா ?



சமீபத்தில் கேட்ட dialogue: அவன் குடிக்காரனா இருந்தா, அதுக்காக அவ கண்டவன் கூட போகணுமா ? (censored version)

கதையின் பின்புலம் : நன்கு படித்த வேலையில் உள்ள இளைஞன், நன்கு படித்து வேலையில் இருந்த பெண்ணை திருமணம் செய்து அழகான பிள்ளையும் பெற்று, வாழ்க்கை அழகாக போய் கொண்டிருக்கும் சமயம், நான்கைந்து வருடமாக கடும் குடிப்பழக்கத்திற்கு கணவன் ஆளாக, பெண்ணிற்கு இன்னொரு ஆணோடு தொடர்பு ஏற்பட்டதோ அல்லது ஏற்பட்டதாக எண்ணம் வந்ததோ, 5 வயது குழந்தையை பற்றி கருதாது, ஆண் தற்கொலை செய்து கொண்டான்.

ஆண் பக்க நியதி:
1. ஊரில் குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் வெகு குறைவு, அதற்காக பெண் தன் எல்லையை தாண்ட வேண்டுமா?
2. திருமணம் என்ற பந்தத்தில் உடன்பட்ட பெண்ணிற்கு எப்படி கணவன் அல்லாதவனை பற்றி எண்ணத்தோன்றும். அப்படி தோன்றினால், அவள் பரத்தையை போன்ற சிந்தை உள்ளவள் தானே?
3. அந்த காலத்தில் எல்லாம் அடித்தாலும், உதைத்தாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று அல்லவா இருந்தார்கள். ஏன் இப்போது இந்த மாற்றம்?
4. குடும்ப நலத்திலும், குடும்பத்தின் பெயரை காக்கும் பெரும் பொறுப்பில் இருக்கும் பெண் கணவன் குடித்தாலும், அடித்தாலும், ஊதாரியாக இருந்தாலும் எப்படி அவனை விட்டு பிரியலாம்?

பெண் பக்க நியதியை எந்த இடத்தில் நின்று பேசுவது என்று புரியாது நிற்கிறேன். ஏனென்றால் வாழ்க்கை கருப்பு வெள்ளை அல்லவே. இடையே உள்ள grey shades தானே எல்லா இடங்களிலும் விரவி உள்ளது. இதில் எந்த இடத்தில் நின்றாலும் அந்த இடத்திற்கு ஒரு விளக்கம் இருக்கிறது. வாழ்க்கையில் சரி தவறு என்று இல்லை. என் பார்வையில் சரி என்பது மற்றொருவர் பார்வையில் தவறாக தெரியலாம்.

அந்த பெண்ணிற்காக வாதாடவில்லை என்றாலும் மருத்துவராக என் பார்வை:

எந்த ஒரு relationship தங்கு தடையின்றி செல்ல நல்ல கருத்து, பேச்சு பரிமாற்றம் தேவை என்று சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்னும் பின்னும் கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை வரலாம். ஆனால் கட்டாயம் வரும் என்பதற்கு இல்லை. அப்படி ஒரு வேலை கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாலும், அல்லது திருமணம் செய்த பின் இருவரின் ரசிப்பு தன்மை குறைந்து போனாலும், அதற்கு யாரை குறை சொல்லமுடியும்.

திருமணம் செய்து கொண்டதால் மட்டும், இருவருக்கும் கட்டாயம் ஒருவரை ஒருவர் பிடித்து தான் ஆக வேண்டுமா? பிடிக்காது போனாலும் வேறு வழியில்லாது, வாழ்ந்து வந்த நிலை மாறி, பெண்கள் படிப்பாலும் வேலையாலும் தனித்து நிற்கவும், பல்வேறு தரப்பட்டவர்களை சந்திக்கும்படி நேரும்போது, மனநிலை மாறி போக நிறைய platform உண்டாகிறது நிஜம் தான். Change is the only constant thing அப்படின்னு Heraclitus 535B.C - 475B.Cலயே சொல்லிட்டு போயிட்டார்.

குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் உடலை மட்டும் அன்றி மனத்தையும் சோர்வடைய செய்யும். தேவையில்லாத கோபம், guilty conscience, அர்த்தமற்ற சந்தேகங்கள், பிசாத்து பெறாத விஷயங்களுக்கு சண்டை, தன் நிலையை நியாயப்படுத்த மற்றவர்கள் மீது குறை கூறுவது, உடலாலோ மனதாலோ தாம்பத்தித்தில் ஈடுப்பட முடியாது போவது, குடும்பத்தை நடத்த போதிய பணம் தராது போவது, சமூகத்திலும் குடும்பவட்டத்திலும் கீழ்த்தரமாக நடந்து கொள்வது இப்படி அடுக்கிக்கொண்டே போகும் போது பெண்ணின் மனதில் கணவன் என்ற பந்தத்தின் மீது லேசான விரிசல் ஏற்படலாம். இந்த விரிசல் நாளடைவில் பெரிதாகலாம். ஏதோ ஒரு விதத்தில் தான் ஏமாற்றப்படுவது போல தோன்றும் சமயம், தன்னை சந்தோஷப்படும் நட்பு கிடைக்க நேர்ந்தால், அந்த சந்தோஷத்தை தக்கவைக்க எத்தனை தூரம் ஒரு பெண் பயணப்படுவாள் என்பது தான் grey area. அந்த சந்தோஷத்தின் அளவும் முடிவும் grey area தான்.

அடித்தாலும், மிதித்தாலும், சக மனுஷியாக மதிக்காது நடத்தினாலும் பொறுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்ற கட்டாய சூழல் மாறிய நிலையில், ஆண் பெண்ணை பற்றி வைத்திருக்கும் rules மாறவேண்டுமா இல்லை பெண்ணின் மனவோட்டம் தவறாக மாறிவிட்டதா?

முன்பு படிக்காது, அடுப்படி, குழந்தை, கணவன் என்ற வட்டத்தில் மட்டும் இருக்கவேண்டும் பெண்கள் என்ற நிலைப்பாடு மாறி, படித்த வேலைக்கு செல்லும் பெண் வேண்டும் என்று கேட்கும் போதே இந்த மாற்றமும் வரலாம் என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

எது சரி??? எது தவறு???

Monday, December 27, 2010

காணாமல் கரைந்தவர்களின் குளம் !


இருட்டு குளத்தில் அமர்ந்து பார்க்கையில்
வெண்மையாய் தகதகக்கும் பிம்பங்கள்
அனைத்திலும் தொலைந்த முகங்களின் திரட்டு...
முகங்களை தொலைத்தவர்கள்
வசிக்கும் வீதியின் முடிவில் தான் என் வீடும்!

இப்போதும் பிடிக்கிறதா என்ற கேள்வி விதைகள் புதைந்து
சந்தேக வாசனை மலர்கள் பூத்து நிற்கிறது!
முன்பு பிடித்தவனின் முகம் பிய்ந்து
இதே குளத்தில் கரைந்துவிட்டதாக சொல்கிறது
நீர் திவலைகள்!

கொதித்து கொப்பளிக்கும் கோப சகதியும்,
தேடியது கிடைக்காத வன்மமும்,
பேசுவது போய் சேராத நிழற்திரை வானமும்,
இழைந்து செய்த கசப்பு உலகங்களின்
முடி சூடா அதிபதிகள் முங்கிய குளம் அது!

நேற்று பிடித்த அவன் முகம்
குளத்தில் புதைந்து நீரின் மேற்பரப்பில்
வெள்ளி கம்பியில் காற்றாடியாய் மிதக்க
அவனும் சொல்கிறான் குளத்தின் அக்கரையில்
என் முகம் மிதப்பதாக!

Wednesday, December 15, 2010

ஏக்கங்களின் கூவல்!



தேடல்கள் நைந்து, நினைவுகள் சிடுக்கு கோலம் இடும் இரவுகளில்
விளக்கங்களும் நலிந்து போக தான் செய்கிறது!
தொடக்கங்களையும் முடிவுகளையும் காணா உயிர்கள் மலிந்து
வியாக்கியானங்களின் சுய இன்பதில் தொலைந்து கொண்டிருந்தது!

சிகப்பு ஆசைகளில் தொலைந்து நிற்கும் நான்
சமதளம் இருக்கும் மேகங்களில் இறக்கை விரிக்க யத்தனிக்க
ஏனோ கலைந்து செல்லும் கனவு குதிரைகளின்
குளம்பின் புழுதியாய் மறைகிறது வாழ்வு!

வளர்ந்து சென்ற கால்தடங்களில் மிச்சமுள்ள ஈரத்தை
தேடியபடி மீண்டும் காலசுவடுகளில் தவழ,
இம்முறை தோல் தேய்ந்து சிதறும் ரத்தம்
காய்ந்த இடங்களில் கண்ணீராய் உருள்கிறது!

தோன்றலில் இருந்த புதுமை
கூடிநின்ற குடும்பதில் குழுமிய வெப்பம்
புணர்தலின் விதிமுறையில் புரிந்த காதல்
எல்லாம் கைப்பாகி உதிர்கிறது!

இறத்தலும் மீண்டும் உயிர்த்தலின் ஆதாரம்
என்பதால் மறைவதிலும் பின் எழுவதிலும்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
ஏக்கங்கள்!

Tuesday, November 9, 2010

பூனையாகிறேன்!


என் வீட்டு அடுக்களையில்
தினம்தோறும் பூத்து நிற்கிறது
சிகப்பும் நீலமும் சுமக்கும் பூக்கள்!
நெருப்புக்கும் பூக்களும் நல்ல பழக்கம்...
பூத்து நிற்கும் அவைகளை ஒதுக்கியபடி
சமைப்பதே வழக்கமாகி விட்டது எனக்கு!

ஜன்னலின் வெளியே ஓங்கி வளர்ந்த மரங்கள்...
பச்சையில் தொடங்கி அடர் மஞ்சளில்
குளித்து அசையும் இலைகள்!
விடியலில் சத்தம் எழுப்பி தூக்கத்தை கலைக்கும்
மரக்கிளைகளில் குடியிருக்கும்
கருப்பில் தங்கம் தோய்த்த சிறகுகள் கொண்ட சிரிப்புகள்!

ஜன்னலின் வெளியே பறக்கும் சிரிப்புகளும்
ஜன்னலின் உள்ளே இருக்கும் பூக்களும் நானும்
சந்திக்க நேர்ந்ததே இல்லை,
திறக்காத ஜன்னல்களால்!
ஜன்னல்கள் இன்னமும் பூட்டித்தான் இருக்க,
சுவர்கள் கரைந்து போகிறது உன் முத்தங்கள் மோதி!

சுவரில்லா வீட்டில் முதன்முதலில் வசிக்கிறேன்,உன்னால்!
நானும் பூக்களும் சேர்ந்து சமைக்கும் அனைத்தும்
உனக்கான பண்டம்!
சமையல் முழுக்க என் வாசம்...
நெருப்பும் நானும் பூக்களும்
உன் கைத்தொட சுவையான பூனையாகிறோம்!

விரல் தீண்டலில் சிலிர்க்கும் ரோமமும்
திமிர் முறிக்கும் உடலும் கொண்டு
இப்போதெல்லாம் வெளியே பறக்கும் சிரிப்புகளை
அவ்வப்போது பிடித்து விழுங்கி விட்டு
நெருப்பின் கதகதப்பில், பூக்களில் சுருண்டு படுக்கிறேன்
உன் வாசம் முகர்ந்தப்படி!

Saturday, October 23, 2010

மஹோன்னதம்!!!



வெகு நாளாய் எழுத முற்பட்டு எழுதாது விட்டு போன
வார்த்தைகள் சலசலக்கிறது கடல் அலை போல
எழுதுக்கோலின் உள்ளிருந்து!
மறுபடி கேட்கிறேன்; யாரிடம் போய் சேர இத்தனை அவசரம் என்று?
தொலைத்தூரம் விலகி தொலைந்து போயிருந்த
ஒருவனிடம் சொல்ல விழைகிறோம் என்கிறது ஓங்காரமாய்!

``விட்டு போன அவனிடம் என்ன பிடித்தது உனக்கு?`` நான் கேட்க,
கருப்பு மை மழைதுளியாய்
என் வெள்ளை படுக்கையில் தூறி
என் அறையெங்கும் மிதக்கிறது...
கண் தழுவும் திசையெங்கும் வெகுதூரம் வரை
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதியபடி மிதக்க...
அவைகளை விலக்கியபடி நடக்கிறேன்!

கோபத்திலும் சிரிக்கும் அவன் கண்கள் பிடிக்கும் என்றவை
இருட்டில் மின்மினிப்பூச்சியாக மாறி பறந்துவிட்டது!
மீசையின் உள்ளே ஒளிந்திருக்கும் சிரிப்பு பிடித்தது என்றவை
இறக்கையில் வண்ணம் தீட்டியபடி எழுத்து கூட்டுக்குள் இருந்து
பட்டாம்பூச்சியாய் வெளிப்பட்டு அவனை தேடி புறப்பட்டது!
அவன் தீண்டல் கரடுமுரடான பட்டு போல என்றவை
அவன் வீட்டின் அருகே ரீங்காரமிட போவதாய்
சிறகு முளைத்து தாவி சென்றுவிட்டது!

அவனை ஏன் பிடித்தது என்று தெரியாத மிச்சமீதி வார்த்தைகள்
என் இரவில் விழித்துக்கொண்டும்
அவன் பகலில் தூங்கிக்கொண்டும்
என் வீட்டு விட்டத்தில் அயர்ந்து சோர்வாய் காத்திருக்கிறது!
அவனுடைய காதல் கடலாய் மாறி என் வீட்டின் கதவின்
முன்னே காத்திருப்பதாய் அவன் எழுதிய கடிதம்
என் காதல் காற்றாய் அவன் ஜன்னல் திறக்க காத்திருந்த போது
வேறு திசை அடித்துப்போவதாய் பார்த்தவர்கள் சொன்னார்கள்!

கண்ணாடி வீட்டில் இருந்து பார்க்கையில்
என் தோட்டம் முழுக்க அவனால் உருமாறிய வார்த்தைகள்
வெவ்வேறு வண்ணம் தோய்ந்து பறந்து கொண்டிருக்கிறது
வராது போன அவனை தேடி!
ஜன்னல்களில் அமர்ந்திருக்கிறோம்
நானும் சிறகு முளைக்காதவைகளும்
என்றாவது புரிப்படும் ஏன் பிடித்தது அவனை என்று!
பிடித்ததின் புரிதலில் முளைக்க இருக்கும் இறக்கைகளை
முதுகின் பின் தேடியபடி!