Monday, December 27, 2010

காணாமல் கரைந்தவர்களின் குளம் !


இருட்டு குளத்தில் அமர்ந்து பார்க்கையில்
வெண்மையாய் தகதகக்கும் பிம்பங்கள்
அனைத்திலும் தொலைந்த முகங்களின் திரட்டு...
முகங்களை தொலைத்தவர்கள்
வசிக்கும் வீதியின் முடிவில் தான் என் வீடும்!

இப்போதும் பிடிக்கிறதா என்ற கேள்வி விதைகள் புதைந்து
சந்தேக வாசனை மலர்கள் பூத்து நிற்கிறது!
முன்பு பிடித்தவனின் முகம் பிய்ந்து
இதே குளத்தில் கரைந்துவிட்டதாக சொல்கிறது
நீர் திவலைகள்!

கொதித்து கொப்பளிக்கும் கோப சகதியும்,
தேடியது கிடைக்காத வன்மமும்,
பேசுவது போய் சேராத நிழற்திரை வானமும்,
இழைந்து செய்த கசப்பு உலகங்களின்
முடி சூடா அதிபதிகள் முங்கிய குளம் அது!

நேற்று பிடித்த அவன் முகம்
குளத்தில் புதைந்து நீரின் மேற்பரப்பில்
வெள்ளி கம்பியில் காற்றாடியாய் மிதக்க
அவனும் சொல்கிறான் குளத்தின் அக்கரையில்
என் முகம் மிதப்பதாக!

Wednesday, December 15, 2010

ஏக்கங்களின் கூவல்!



தேடல்கள் நைந்து, நினைவுகள் சிடுக்கு கோலம் இடும் இரவுகளில்
விளக்கங்களும் நலிந்து போக தான் செய்கிறது!
தொடக்கங்களையும் முடிவுகளையும் காணா உயிர்கள் மலிந்து
வியாக்கியானங்களின் சுய இன்பதில் தொலைந்து கொண்டிருந்தது!

சிகப்பு ஆசைகளில் தொலைந்து நிற்கும் நான்
சமதளம் இருக்கும் மேகங்களில் இறக்கை விரிக்க யத்தனிக்க
ஏனோ கலைந்து செல்லும் கனவு குதிரைகளின்
குளம்பின் புழுதியாய் மறைகிறது வாழ்வு!

வளர்ந்து சென்ற கால்தடங்களில் மிச்சமுள்ள ஈரத்தை
தேடியபடி மீண்டும் காலசுவடுகளில் தவழ,
இம்முறை தோல் தேய்ந்து சிதறும் ரத்தம்
காய்ந்த இடங்களில் கண்ணீராய் உருள்கிறது!

தோன்றலில் இருந்த புதுமை
கூடிநின்ற குடும்பதில் குழுமிய வெப்பம்
புணர்தலின் விதிமுறையில் புரிந்த காதல்
எல்லாம் கைப்பாகி உதிர்கிறது!

இறத்தலும் மீண்டும் உயிர்த்தலின் ஆதாரம்
என்பதால் மறைவதிலும் பின் எழுவதிலும்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
ஏக்கங்கள்!

Tuesday, November 9, 2010

பூனையாகிறேன்!


என் வீட்டு அடுக்களையில்
தினம்தோறும் பூத்து நிற்கிறது
சிகப்பும் நீலமும் சுமக்கும் பூக்கள்!
நெருப்புக்கும் பூக்களும் நல்ல பழக்கம்...
பூத்து நிற்கும் அவைகளை ஒதுக்கியபடி
சமைப்பதே வழக்கமாகி விட்டது எனக்கு!

ஜன்னலின் வெளியே ஓங்கி வளர்ந்த மரங்கள்...
பச்சையில் தொடங்கி அடர் மஞ்சளில்
குளித்து அசையும் இலைகள்!
விடியலில் சத்தம் எழுப்பி தூக்கத்தை கலைக்கும்
மரக்கிளைகளில் குடியிருக்கும்
கருப்பில் தங்கம் தோய்த்த சிறகுகள் கொண்ட சிரிப்புகள்!

ஜன்னலின் வெளியே பறக்கும் சிரிப்புகளும்
ஜன்னலின் உள்ளே இருக்கும் பூக்களும் நானும்
சந்திக்க நேர்ந்ததே இல்லை,
திறக்காத ஜன்னல்களால்!
ஜன்னல்கள் இன்னமும் பூட்டித்தான் இருக்க,
சுவர்கள் கரைந்து போகிறது உன் முத்தங்கள் மோதி!

சுவரில்லா வீட்டில் முதன்முதலில் வசிக்கிறேன்,உன்னால்!
நானும் பூக்களும் சேர்ந்து சமைக்கும் அனைத்தும்
உனக்கான பண்டம்!
சமையல் முழுக்க என் வாசம்...
நெருப்பும் நானும் பூக்களும்
உன் கைத்தொட சுவையான பூனையாகிறோம்!

விரல் தீண்டலில் சிலிர்க்கும் ரோமமும்
திமிர் முறிக்கும் உடலும் கொண்டு
இப்போதெல்லாம் வெளியே பறக்கும் சிரிப்புகளை
அவ்வப்போது பிடித்து விழுங்கி விட்டு
நெருப்பின் கதகதப்பில், பூக்களில் சுருண்டு படுக்கிறேன்
உன் வாசம் முகர்ந்தப்படி!

Saturday, October 23, 2010

மஹோன்னதம்!!!



வெகு நாளாய் எழுத முற்பட்டு எழுதாது விட்டு போன
வார்த்தைகள் சலசலக்கிறது கடல் அலை போல
எழுதுக்கோலின் உள்ளிருந்து!
மறுபடி கேட்கிறேன்; யாரிடம் போய் சேர இத்தனை அவசரம் என்று?
தொலைத்தூரம் விலகி தொலைந்து போயிருந்த
ஒருவனிடம் சொல்ல விழைகிறோம் என்கிறது ஓங்காரமாய்!

``விட்டு போன அவனிடம் என்ன பிடித்தது உனக்கு?`` நான் கேட்க,
கருப்பு மை மழைதுளியாய்
என் வெள்ளை படுக்கையில் தூறி
என் அறையெங்கும் மிதக்கிறது...
கண் தழுவும் திசையெங்கும் வெகுதூரம் வரை
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதியபடி மிதக்க...
அவைகளை விலக்கியபடி நடக்கிறேன்!

கோபத்திலும் சிரிக்கும் அவன் கண்கள் பிடிக்கும் என்றவை
இருட்டில் மின்மினிப்பூச்சியாக மாறி பறந்துவிட்டது!
மீசையின் உள்ளே ஒளிந்திருக்கும் சிரிப்பு பிடித்தது என்றவை
இறக்கையில் வண்ணம் தீட்டியபடி எழுத்து கூட்டுக்குள் இருந்து
பட்டாம்பூச்சியாய் வெளிப்பட்டு அவனை தேடி புறப்பட்டது!
அவன் தீண்டல் கரடுமுரடான பட்டு போல என்றவை
அவன் வீட்டின் அருகே ரீங்காரமிட போவதாய்
சிறகு முளைத்து தாவி சென்றுவிட்டது!

அவனை ஏன் பிடித்தது என்று தெரியாத மிச்சமீதி வார்த்தைகள்
என் இரவில் விழித்துக்கொண்டும்
அவன் பகலில் தூங்கிக்கொண்டும்
என் வீட்டு விட்டத்தில் அயர்ந்து சோர்வாய் காத்திருக்கிறது!
அவனுடைய காதல் கடலாய் மாறி என் வீட்டின் கதவின்
முன்னே காத்திருப்பதாய் அவன் எழுதிய கடிதம்
என் காதல் காற்றாய் அவன் ஜன்னல் திறக்க காத்திருந்த போது
வேறு திசை அடித்துப்போவதாய் பார்த்தவர்கள் சொன்னார்கள்!

கண்ணாடி வீட்டில் இருந்து பார்க்கையில்
என் தோட்டம் முழுக்க அவனால் உருமாறிய வார்த்தைகள்
வெவ்வேறு வண்ணம் தோய்ந்து பறந்து கொண்டிருக்கிறது
வராது போன அவனை தேடி!
ஜன்னல்களில் அமர்ந்திருக்கிறோம்
நானும் சிறகு முளைக்காதவைகளும்
என்றாவது புரிப்படும் ஏன் பிடித்தது அவனை என்று!
பிடித்ததின் புரிதலில் முளைக்க இருக்கும் இறக்கைகளை
முதுகின் பின் தேடியபடி!

Monday, July 12, 2010

நான் ஆனதால்....


வலைகள் முளைத்து நகரும் தரை என் தேசம்!
சிணுங்கல் அற்ற நீர் குமிழியில் மிதக்கையில்
மெதுவாய் கேட்டது ஈரவிரலின் பிராண்டல்!
என் சுவாசம் நீரிலும்...
அதன் சுவாசம் நிலத்திலும்...
காலிடுக்குகளில் மணல் துறுவியபடி நின்றது அது.
அகல கண்விரித்து கன்னக்குழிகளில் முத்து வைத்தப்படி
சிரிக்கிறது என்னை பார்த்து.
சின்ன கை... சின்ன கால் தாங்கி!
செங்குத்து பாறைகள் கடலுக்குள் இருந்து
முளைத்தெழ, நான் அதன் மேல்!
மெல்ல அருகில் வரும் தத்தி தத்தி...
கேட்க கேள்விகள் பல அடங்கிய பெரிய கண்களோடு!
கை நீட்டி தொடுகிறேன்!
சொல்லொணா சிலிர்ப்பு உடலில் பரவ
ஆரத்தழுவுவேன்!
முத்தமிடுவேன்!
உச்சி முகர்வேன்!
முதன்முதல் இருதயம் துடிப்பதை உணர்கிறேன்!
அதுவும் சிரிக்கிறது, முத்தமிடுகிறது.
என்னோடு வா என்று நான் அழைக்க
என்னோடு வா என்று அது அழைக்க
யார் யாரோடு போவது என்று பெரும் கேள்வி!
நான் மீனானதால் தரையில் சுவாசிக்க இயலவில்லை!
என் மகவு மானுடமானதால் நீரில் வசிக்க இயலவில்லை!
கண்ணீரும் கடல் உப்பில் கரைய பிரிகிறேன்!
சல்லடை மணல் துகளும், ஈர விரலின் நுட்பமும்
மேல்வீசிய வாசமும் மட்டும் தாங்கிய
நினைவு வலைகள் மட்டும் புசிக்கும் மீனாகிறேன்!
வலைக்குள் இருந்து மீள்வேனோ மாள்வேனோ...

Monday, May 10, 2010

நானும் என் சுவர்களும்!!!



அறைக்குள் நுழைந்ததும்
என் சுவர்கள் என்னை இழுத்து அணைக்கிறது!
எப்படி போயிற்று இந்த தினம் என்று கேட்டபடி.

சிகப்பு சுவர் சொல்கிறது கருப்பு சுவரிடம்
இப்பதானே வந்தாள்...
செருப்பையாவது கழட்டவிடேன் என்று!

அழுகையோடு என் சுவர்களை பார்த்து சொன்னேன்
இன்றைய தினம் சுகமில்லை என்று!
எந்த சுவரிலும் சாயாது அறையின் மத்தியில் நின்று..

தினமும் என் பகல் முடிந்ததும் என் சுவர்கள்
துணையோடு தூங்குகிறேன்
என்னை அணைக்க போட்டிகளோடு தாலாட்டும் அவை!

காகிதத்தில் சிக்கா எழுத்துக்களால்...
காதுகளுக்கு போய் சேரா வார்த்தைகளால்...
பார்வையில் பதியா முகங்களால்...

என் இன்றைய தினமும் நிரம்பி வழியத்தான் செய்கிறது!
இன்னமும் வெற்றிகரமாய் வெறுமைகள் மட்டுமே
நிரப்புவேன் என் பேச்சில் மற்றவர்களிடம்!

என் நிர்வாணம், என் அழுகை, என் திமிர்,
என் திருட்டு, என் கோபம், என் பசி
எல்லாம் பார்த்தும் சுவர்களுக்கு என்மேல் தீராக்காதல்!

நிழல் உண்மைகள் எல்லாம் தெரிந்த சுவர்
என் பட்டாம்பூச்சியை கூட்டுப்புழுவாய் மாற்றும்!
இரவுகளில் என் அறை என்மேல் மடிகிறது...

வரண்ட செங்கலில் கூட எனக்கான காதல் மிச்சமிருக்க
என் நாட்களின் ஆசைகள் எல்லாம் வடியும் அவைகள் மேல்...
என்றும் காதலனாய் எனக்கு என் சுவர்கள் மட்டும் போதும்!

Friday, April 9, 2010

இன்பத்தில் ஓர் நாள்!



எப்போ அப்பா நான் பெருசா வளருவேன்?
பத்து வயதாய் நிரம்பி வழிந்த சிரிப்பில்
தந்தையின் கையில் படுத்து
வியர்வை வாசத்துடன் மார்பில் முகம் புதைத்து
கைவிரல் நெஞ்சின் முடி திருகியபடி..

சிரித்து பதில் சொன்னது காதில் ஒலிக்க..
தனித்து படுக்கையில் இருக்கும் இன்றைகளில்
மீண்டும் தேடுகிறேன் அதே வாசத்தை!
பார்க்கும் கைகளில் எல்லாம்
வெளுத்த வயதுகளின் வெளியில்...

சுகிக்கும் ஈர நாக்குகளும்
விரலில் சுருட்டப்படும் தோல்மடிப்புகளும்
உணராது வெறுமே வெளிவரும் முனகல்களும்
உராயும் கணங்கள் முடித்து எழுந்துபோகும் உடல்களும்
தோற்றார்கள் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
அதே அறையில் ஒளிந்திருந்த பத்து வயது அவளை
கண்டுப்பிடிக்க இயலாது...

அழுக்கு மனிதவாடையில் மூழ்கும்
ஈர படுக்கையில் கண்களற்ற தீண்டல்களில்
தொலைந்தபடி மனக்கண்ணில் தீட்டுகிறாள்
தினம் ஒரு படத்தை...
ஒரு கணம் பனிமலையின் உச்சத்தில்
வெள்ளை சிறகு விரிக்கும் பருந்தாய்!
மறுகணம் பவள பாறையின் மத்தியில்
மிதக்கும் அழகு கடல் ஆமையாய்!

நிற்கும் சமயங்களின் நெடி தாங்காது
மூழ்கும் கனவுகளில் வந்து போகிறார்!
கைதொடா தூரத்திலேயே நின்று
முகம் பார்க்காது அவளை தாண்டி
``பாருங்க அப்பா என்னை!``என
போகும் அப்பாவின் பின்னாலே
கதறிக்கொண்டு ஓடுவதில் கழிகிறது
இவள் இரவுகள்!
எப்போ அப்பா நான் சிறுசா மாறுவேன்?

Friday, February 26, 2010

மடித்து கிழிபவைகள்!



தொலைந்து கொண்டிருந்த இன்றைகளில் ஒரு நாள்
கவலையோடு பார்க்கிறேன் என் கால்களையும் அந்த விதானத்தையும்...
பழுப்பேறுகிறது சருமம் தூசியோடு!
சுற்றி முற்றிப் பார்த்து துடைக்க விழைந்தேன்...
அழுக்குகளுக்கு மத்தியில் அங்கும் இங்கும் அழகு சாயம்!
ஓவியங்கள் நிறைந்த அந்த கூடத்தில் சாயம் புதிதல்ல...

சொட்டிய நிறக்குவியல் என்றும் போல ஒதுக்கித் தள்ள முயல
ஏனோ எங்கெருந்தோ விசும்பல் மிக சன்னமாய்!
நெஞ்சுக்கூட்டைத் தொட்டு பிழிய
வெகு நாள் கழித்து அகம்விழித்தேன்...
சத்தம் வந்த வழித்தேடி போக,
மெல்ல என் கால்கள் விட்டத்தை நோக்கி!

எங்கோ ஒரு மூலையில் இருந்து வரும் முனகல்
கிழிந்து கரைந்து போகும் ஏதோ ஒன்றிலிருந்து!
என்றோ வரைந்து மறந்த ஓவியம்...
அமர்ந்து பேச ஏனோ ஆசை உந்த
நீண்ட நேரம் கழித்து உயிர் வாழ்வதாய்
எண்ண தோன்றியது நிமிடங்கள்!

ஏன்.. எப்படி... எதற்கு...
கேள்விகள் கேட்டப்படி நான் தொட!
சாயங்கள் கரைந்தவாறு சொல்லியது விட்டத்தில் சொருகப்பட்ட கதையை...
என்றோ ஒரு அழகான கதிரொளியில் புனையப்பட்டு
காரணங்கள் வெவ்வேறாக காலம் உருள
ஓவியமாகி, தடுப்பாகி, மூலையில் நிறுத்தப்பட்டு
கடைசியில் ஒழுகும் கூரையின் ஓட்டை அடைக்க நேர்ந்த நிலையை!

தொட்ட நேரம் என் கை முழுக்க சாயம் ஒட்ட
சிலிர்க்கிறேன் வெகு நாள் கழித்து!
கரைந்து சொட்டும் வண்ணங்கள் கைக்கொள்ளாது தாங்கி
விட்டத்திலே படுத்து என் மேல் வழிய சிரித்தோம்...
கிழியும் ஓரங்கள் வழியே உலகின் அத்தனை விஷயங்களும்
பேச யத்தனிக்க மனம் மின்மினியானது!
நாளையும் வருவாயா என்னோடு பேச என்று கேட்க
ஆமென்று கூறி கீழிறங்கி விடைப்பெற்றேன் ஓவியத்திடம்!

சிதிலங்கள் தொட்ட விஸ்தாரங்கள்
உடைந்து விழுந்த தடுப்புகளையும்
உளுத்து போன கதவுகளையும்
என் கால் தாண்ட இயலாது போனது!
என்றாவது எனக்கும் நினைவுக்கு வரலாம்
வண்ணம் பறிமாறிய பொழுதுகளும்..
பேசி சிரித்த கணங்களும்...
திரும்ப பார்க்க நினைத்தவைகளும்..

இப்போதைக்கு என்னால் செய்ய இயன்றது
பிரார்த்தனை மட்டுமே..
மழை இன்னும் கொஞ்ச நாள் வராது போகட்டுமே!
மீதமுள்ள வண்ணமாவது கரையாது நிற்கலாம்...
பேசவிழயும் ஓரங்கள் மக்கினாலும்
உணர வண்ணங்களாவது மிஞ்சுமே!

Sunday, February 21, 2010

உடலும் உடல் சார்ந்த என் பாலையும்...



வேட்கை தகிக்க நடக்கிறேன்...பாலை..
நடக்கும் உடல் முழுக்க முட்கள்...
வழியும் என் நீச்ச ரத்தத்தின் வாடை காற்றில் மேய
எஞ்சி நிற்கும் சருமத்தில் ஒழுகிய எச்சிலின் மிச்சங்கள்
கால் படறும் என் தரை முழுக்க ரத்தம் தோய்ந்த உதடுகள்!

உதடுகளின் சூடு பழுக்க வைக்கிறது
காலின் உட்சருமத்தை...
சூட்டுக்காக ஒதுங்க இடம் தேட
வழிமுழுக்க அலையும் கைகள் கொண்டு
நெடுநெடுத்து வளர்ந்து நிற்கும் மரதேகங்கள்...

நிழலுக்காய் ஒதுங்கி நின்றால் மரகைகளுக்குள் இருந்து
வளரும் நகங்கள் போடும் மார்பில் கீற்றுக்கோலம்!
எஞ்சிய சருமம் காக்க விலகி சென்றால்
மரகால்களாய் நின்ற வேர் தடுக்கி விடும் என் நடையை!
ரௌத்ர நிழல்களுக்கு பயந்து ஒதுங்குகிறேன் என் வெயிலில்..

கவ்வி சுவைக்கும் உதடுகளுக்கும்
எட்டி பிறாண்டும் கைகளுக்கும்
மத்தியில் நானும் என் பசியும்...
திக்கு தெரியாது தடாகங்களை தேடி போகிறோம்..
தடாகங்கள் குளிரும் யாரோ சொன்னார்கள்!

தண்ணீரில் உடல்கசடு கழுவலாம்!
தண்ணீரில் தாகம் தணிக்கலாம்!
தண்ணீரில் பிம்பம் பிரதிபலிக்கலாம்!
தண்ணீரில் மிதக்கலாம்!
தண்ணீரில் கரைந்து போகலாம் என்றும் சொல்லியிருந்தனர்!

தடாகம் இருக்கும் இடங்களில்
சக உயிர்களும் காண இயலும் என்றும் சொன்னார்கள்!
அவை மனிதமோ மிருகமோ தெரியாது இப்போது!
சலசலப்புகள் மட்டுமே கேட்கும் காதுகளுக்கு
துடிக்கும் இதயங்களின் சப்தம் கேட்கக்கூடும் முதன்முறை...

மென்மைகள் தேடும் கால்கள் சுமந்து
வழிமுழுக்க தகிக்கும் நாக்குகளுக்கு ரத்தம் சொட்டவிட்டு
தட்டுத்தடுமாறும் நடைகளோடு செல்கிறேன்...
வெடித்த கட்டாந்தரைகள் வழிகூற மறுக்கும்!
ஆர்ப்பரிக்கும் மௌனங்களும் கணக்கெடா தூரங்களும் கண்சிமிட்டும்...

முதுகில் அமர்ந்திருக்கும் கனவு மூட்டை
ஒவ்வொரு நொடியும் பிரசவிக்கும் கனவு மகவுகளை...
சிதறியோடும் ஒவ்வொன்றையும் எடுத்து
திணிக்கிறேன் மூட்டையின் உள்ளே...
நீர்தேக்கம் வரை துணை வர சொல்லி!

அடைந்தேன் குற்றுயிராய் என் இலக்கை!
கனவுகளோடு பொதிந்தேன் சில்லென...
கண்முன் எல்லாம் என்னுள்ளாக மாறுகிறேன் விதையாய்...
வளர்கிறேன் விருட்சமாய், என் கைகள் வான் நோக்கி..
நான் கடந்த மரங்களை விட மிக பிரம்மாண்டமாய்!

என் நிழல் உங்களுக்கு இதம் தரும்...
என் காற்று வறண்ட உங்களுக்கு உணர்ச்சி தரும்..
புதிய தாய்மரமாய் ஆன என்னிடம்
நீங்கள் இளைப்பாறலாம் உங்கள் பயங்கள் விடுத்து...
இன்றும் இனி எப்போதாவது இவ்வழி செல்ல நேரினும்!

Saturday, February 13, 2010

விளிம்பில்...




கேட்கிறாய் நீ
ஊஞ்சலில் பயணித்தது உண்டா என்று...
கண்மூடும் இந்நொடி நான் பறக்கிறேன்!
மேகம் நோக்கி போகையில் பிரார்த்தனை..
வானம் அடைந்து ஊஞ்சல் அங்கேயே நின்று போக!
நான் பறக்கும் என் வானம் முழுக்க
விழுதுகளாய் கயிர்...

ஒவ்வொரு கயிரும் நான் பேசி முடிக்காது
விட்ட வார்த்தைகள்..
எத்தனை தாபம்
எத்தனை ஏக்கம்
எத்தனை தீர்க்கம்
எத்தனை எதிர்ப்பார்ப்பு
பதில் இல்லா காலங்கள் வலிக்கிறது

என்ன தான் பதில் இதற்கு கேட்கிறான்
புரியாது நிற்கிறது என் ஊஞ்சல்
கேள்வி தெரிந்தால் தானே பதில்...
கேள்வியே தெரியாத காட்டில்
எந்த வேரில் இருந்து பதில் தேடி எடுக்க...
ஒவ்வொரு வேரிலும் மண்டி கிடக்கும் பதில்களை
வெறுமே பார்க்கிறேன்...

நான் கேட்டேன்
உன் ஜன்னல் சுகமா
உன் வானம் எப்படி என்று...
என் வானம் இருண்டு யானை நிறமாய்
நீலம் தொலைத்து தேடுகிறதை கூற...
சொல்வான்
அவனுடைய செவ்வானத்தை எனக்கு சிறிய
பொட்டலமாக்கி என் வழி வரும் மேகத்திடம் தருவதாய்!

தொலைக்குமோ மேகம் உன் வானத்தை.. கேட்கிறேன்.
உன் முகம் தந்து அனுப்புகிறேன் தொலைக்காது...
ஜன்னலின் பக்கமாய் காத்துக்கொண்டே இரு..
மறக்காது உன் வானத்தில் பூசிக்கொள் என்றான்..
நீயும் நானும் அருகில் இருந்தால் என்ன சொல்வோம்?
நீ கேட்க..
வார்த்தைகள் நட்டு மௌனம் முளைத்த வெளிகளில்
அமைதியோடு இருப்போம் என்கிறேன்...

நான் ரசிக்கும் அத்தனையும் நீ ரசிப்பாயோ...
கேள்வி எழந்து நம்மை பார்க்க
சுழலும் நம் பூமிகள் எதிர்பதங்கள் தான்...
என் வானம் உன் நிலம்!
உன் இருட்டு என் பகல்!
என் காற்று உன் தண்ணீர்!
உன் சிரிப்பு என் அழுகை!
இப்படி அத்தனையும் மாறி மாறி நிற்க
இத்தனையின் ஊடேவும் தொடுகிறோம்...
வானம் ஏறி நான் வர
பூமி நோக்கி நீ வர...
நம் ஊஞ்சல் பாதைகள் உறைந்து போய்..

Saturday, January 30, 2010

மந்தகாச உடுப்புகள்!!!



இரவுகளில் ஒரு கந்தர்வன் வருகிறான்..
கறுப்பு குதிரையில் சாட்டை சுழட்டியபடி!
தூங்கியும் தூங்காத வேளைகளில் வரும்
அவன் வாசம் பிடிக்கிறது...
ரத்தமும் தோல்வியும் திமிரும் வெறியும்
கலந்த ஒரு இருட்டு வாசம்...

அவன் பேச்சு மிக மெதுவாய் கேட்டாலும்
காதுக்குள் அது பிரளயமாய்...
நான் எச்சில் ஒழுக தூங்கும் நிமிடங்களை
என் சுவற்றின் விட்டத்தில் இருந்து பார்க்கிறான்...
அவனின் விசும்பல் மிக நுட்பமாய்...
என்னை உறக்கத்தில் புரட்டி போடும்!

விழித்துப் பார்க்கிறேன்
மூக்குகள் உரச, அவன் அந்தரத்தில் மிதக்கிறான்..
கண்முன் விரிந்த கனத்த கடலாய்
கனவுகள் அற்ற கனவில் எனக்காய் உயிர்த்தெழுகிறான்...
கைப்பற்றி அழைத்துப் போகும் உன் தேசத்தில்
சிரிப்புகளும் சோகங்களும் வறண்டுவிட்டது என்கிறான்!

என் கறுப்பு கந்தர்வனே!
இத்தனை நெருக்கத்தில் சுவாசம்
தெறிக்க நிற்கும் உன்னை கைநீட்டி அணைக்கத் தேட...
கணக்கெடுக்க முடியா எத்தனை தொலைவில் அவன்!
கறுத்த அவனில் இருந்து முளைக்கும் ஆயிரம் கரங்களும்
என் பாதையாய் என் வானமாய் விரியும்!

உன்மத்த நிதர்சனத்தை
என் படுக்கையில் கரைத்துக்கொண்டு இருக்கும் எனக்கு
இன்னமும் தெரியாது அவன் யார் எனக்கென்று..
சிரிப்புகளின் ஊடே குரல் குழைந்து
சொல்கிறான்..
இருக்கும் தோலான உன் உடலை கழட்டிவிட்டு வா...
மிதக்கும் உன் ஒன்றுமில்லாதவைகளுக்கு
கொடுக்கிறேன் மந்தகாசத்தை...
உடுத்திக்கொண்டு பார் புரியும்
நான் உன் தோழி...
நீ என் தோழன்...

Monday, January 25, 2010

ப்ரபஞ்சத்தின் தூரிகை...



வெள்ளை நிற குடைப்பிடித்து
வெளிர் சிகப்பு உடை அணிந்து
கை கொள்ளா வண்ண கரைசலை
விரிந்த என் வானசுவற்றில் தெளித்து
அண்டம் முழுக்க உதிரும்
கேள்வி குறிகளில் கால் பதித்து
கருப்பு காலணிகள் அழகாய் பூட்டி
ஏறி செல்வேன் என் வானவில்லினுள்...

ஒளிரும் நட்சத்திரங்களின் மிளிர்ப்பெடுத்து
வழியும் என் அமைதியில் கலந்து
நோக்கும் கண்களின் நிறம்பிரித்து
ஒன்றாய் கொட்டி கலப்பேன்...
முயல்குட்டியின் வாஞ்சையும்
என் மகனின் வாசமும்
உலகின் தாய்மையும் கையுடுத்து
இடுவேன் என் கரைசலுக்குள்...

பசும்புல் ஈரம் கொண்டு
இளம்நீல மேகம் பிழிந்து
அன்பின் சிகப்பெடுத்து
ஏத்துவேன் வண்ணங்களை...
கரைத்தெடுத்த சிகப்புகளும் பச்சைகளும்
அரைத்தெடுத்த என் தங்க நிலவினில்
மெதுமெதுவாய் உருக
மெல்ல மண்டியிட்டு கேட்கிறேன்
என் நிறங்களின் மொழியினை...

சந்தேககோபத்தின் குரல்
பறிக்கும் என் சிரிப்பினை!
யார் அழகென்ற விவாதத்தில்
சலசலக்கும் வண்ணக்குவளை...
புருவம் சுளித்து முறைத்தேன்
உறக்கம் தொலைத்த கண்கொண்டு
ரத்தநாளத்தின் சுவடுகள் அதனுள் தெறிக்க...

சிகப்பிடம் கூறினேன்
நீ என் ஆசை என்று..
கருப்பிடம் கூறினேன்
நீ என் பெண்மை என்று...
பச்சையிடம் சொன்னேன்
நீ என் அழுத்தம் என்று...
நீலத்திடம் சொன்னேன்
நீ என் வெறுமை என்று...

வெண்மையின் மகவுகளாய்
அன்பின் கனவுகள் சுமந்த
நீங்கள்தான் என் மொத்தமும் என
இதழ் நனைக்க முத்தமிட்டேன்...
கைகொண்டு அணைத்து
அள்ளியெடுக்கிறேன்
என் ஆசை உலகம்
புதிதாய் புனைய...

மனம் கொண்டு வரையும்
என் அற்புதபூமியில்
பேரன்பு மென்சருமங்களை வருடும்...
சிலிர்த்தெழும் காதலை இதயம் ருசிக்கும்...
அபரிதமான சமாதானத்தில் உள்ளம் அதிரும்...
புன்னகை மட்டும் உலவும் உயிர்மூச்சாய்...

வழியும் கண்ணீர் துடைக்க
என் வண்ண பட்டாம்பூச்சிகள்
கடன் தரும் மென்சிறகுகளை...
இதயம் உடைக்கும் வார்த்தைகள் தடுக்க
என் அழகு பூக்கள்
கேடயாமாக்கும் அதன் இதழ்களை...

இந்த வெறுப்புகள் அற்ற என் செல்ல ஆகாயத்தில்
தீராத இசை புணரும் நான் வரைந்த வானவில்லை
சலிப்புகள் மறந்து எந்நேரமும்...
சூசகமாய் உரசிய சூட்சம சங்கமத்தில்
பிறக்கும் ஒவ்வொன்றும்
மாறும் என் தூரிகை விரல்களாய்...

ஒரு விரல் கொண்டு வரைந்த என் ப்ரபஞ்சம்
இத்தனை இத்தனை எழிலெனில்
என் விரல்கள் அத்தனையும் பரிசாக்குவேன்
உங்கள் அனைவருக்கும்!

Saturday, January 16, 2010

அசோக வனங்களும் ராதையும்!!!



ராதையாய் சீதையாய் எழுதி பார்க்கிறேன்
புதிய சகாப்தங்களை...
சூர்ப்பனகைகளும் மேனகைகளும்
எனக்குள் அடங்கித்தான்
யாதும் ஆகி நிற்கிறேன்;
என் பிரிவினைகளுடன்!
ஆயிரம் கரமும் காலும் நாக்கும் முளைத்து!
கடவுளா காமுகியா தேவதையா பெண்ணா...
நான் யார் இதில் உங்கள் பார்வையில்...

இதிகாசங்களின் பக்கங்கள் தொடங்கி இன்றைகள் வரை
எங்களின் வித்துக்களும் அதன் முடிச்சுகளும்...
நான் வசிக்கும் பட்டியின் தடுப்பாய்
உங்கள் சட்டங்கள்....
எது சரி எது தவறு என்று இனி
முடிவெடுப்போம்....
தராசுகளை உங்கள் கையில்
இருந்து பிடுங்கி...
போதும் ராமர்களுக்கும் கிருஷ்ணர்களுக்கும்
நான் காத்திருந்த நிமிடங்கள்...

அக்னிப்பரிட்சைகள் அலுப்பாய் இருக்கிறது!
காதலாய் காத்திருந்து அசதி தட்டுகிறது!
புரட்டு புராணங்களும் மார்த்தட்டும் வீர வசனங்களும்
வெட்டித்தான் போடுகிறது
எஞ்சிய தனங்களை...
மாதமொரு முறை மாறும் சமூகநெறி
மாறாமல் ஏற்றும் இதயத்தில் படிமத்தை...

பாதிநேரம் உங்கள் பல்லிடுக்குகளில்
சிக்கி என் கற்பு காரை தான் படிகிறது...
விமர்சன வரைமுறை கோடுகள்
உங்கள் நாக்குகள் தாண்டி எம் படுக்கையறைவரை!
தடித்த பேச்சுகளில் பொசுங்கி போயே விட்டது
எஞ்சி இருந்த கருணையும்...

பெண்ணெனில் இப்படி தான் இருத்தல் வேண்டும்
என பழுத்த கல்வெட்டுகளை கழுத்தில் மாட்டி,
விழிமுட்டும் ஏனைய உயிர்களுடன்
தாயாய், தாரமாய், தாசியாய் மாறி
இனி கால் பதித்து நிற்க தரைகள் அற்று
வேரருந்து மிதக்கிறேன்
என் சுயங்கள் கிழிந்து!

ஏகாந்தங்களும் மந்தகாசங்களும்
புத்தகஏடுகளில் மக்கிப்போக...
ஊழிப்பெருக்காய் கண்ணீர்
மாராப்புகளை அடித்துப்போக...
கனவுகளாய் நிஜங்களும்
நிஜங்களில் நினைவிழந்தும்
தவித்து போகிறது உயிர்பரப்பு...

நா உலர்ந்து போகிறது...
பெண்ணியங்களும் உடலரசியல்களும்
பேசி பேசி...
என் அன்பு ராமரே!
என்னை அக்னிகுண்டத்தில் ஏற்றும் உன்னகத்தே
இன்று என்ன கேள்வி?
நன்கு தெரியும் எனக்கு ...
சோரம் போனது என் உடலா என் மனமா...
இது தான் அல்லவா
பதில் எதுவாய் இருப்பின் மனம் அடங்குவாய் நீ...
இன்றைய என் பதில் சஞ்சலம் தீர்ப்பினும்
உன் நாளைகளில் புதிய கேள்வியுடன் நீ நிற்பாய்
அது சாஸ்வதம்...

கோகுலமோ அயோத்தியோ எனக்கு வேண்டாம்
அங்கீகாரம் கொடுக்கும் பெயரோ வேண்டாம்...
தனிமைகளில் வெதும்பி கற்பனையில்
என் நாட்கள் ஓட...
நான் நடக்கும் இன்றைய பாதையில்
நேற்றைகள் இருளாய் படிய
நாளைகள் முள்ளாய் அவதணிக்க
வெளிச்சம் தொலைந்த விண்மீன்கள்
மட்டுமே துணையாய்...

சிரிப்புகளின் ஊடே நிர்ச்சலனங்களற்ற
என் பாதுகாக்கப்பட்ட கடந்தக்கால வெளிகள்...
கால்கள் தாண்டி ஓடிய பட்டாம்பூச்சி வாழ்க்கையை,
யாருமற்ற அடர்தனிமையில் உதிரும் மயிர்களின் ஊடே
எண்ணித்தான் பார்க்கிறேன்!
ஒன்றுமே அற்ற சூனியத்துக்குள்
இருந்து விடுபட
அசோகவனத்தில் ஒதுங்குகிறேன்
மாளிகைக்கு மயானங்களே மேலென்று!

Wednesday, January 6, 2010

காயசண்டிகை ஆகிய மணிமேகலை...



ரத்தம் படிந்த கைகள் காஞ்சனன் உடையது....
ரத்தம் தோய்ந்த நினைவுகள் என்னுடையது....
ரத்தம் உறைந்து மறுத்த உடல் உதயகுமரனுடயது...
எத்தனை முகம் கடந்து இருக்கிறேன் இது வரை...
எத்தனை கண்ணீர் துளிகள் கண்டு இருக்கிறேன் இது வரை...
அழகும் சிரிப்பும் அர்த்தம் இல்லாமல் ஆனது எப்படி..

நினைவில் நிற்கும் அம்மாவின் முகம்
இப்போது மழித்த தலையுடன்...
அவள் நீண்ட கருமையான கழல்
எனக்கு மிக பிடிக்கும்...
மூலிகையும் வாசமும் அவள் மணமும்
சேர்ந்து ஒரு கலவை அவள் மேல்...
தந்தை நினைவில்லை...
இறந்தார் அரசகட்டளையால்
என்று கேட்ட நொடி
என் தாய் அழகிழந்தாள்....

நொடிகொரு முறை சொல்வாள்
நான் கண்ணகியின் மகள் என்று...
அழகுக்கு மாதவி என்ற நிலை மாறி
இப்போது துறவறம் ஏந்தினாள்....
சுதாமதியுடன்...
அமைதியை வேண்டி...
புத்தனின் யோனிகளும் லிங்கங்களும் இல்லா பாதை
அவள் அலைபாய்ந்த மனதுக்கு
வழியை காட்டியிருக்க வேண்டும்...
தடம் மாறும் வயது எனக்கு...
தெளிவில்லை....

கவர்ச்சியானவள் இவளும்...
நாட்டியம் படித்தாள்...
ஜோதிடம் பார்ப்பாள்...
மணிமேகலையின் பாடல்
காதுக்குள் ஓயாமல் ஒலிக்கும் என்று கூறியவன்
உதயகுமாரன்...
ஆசையா... காதலா... காமமா...
என்று பிரித்தெடுக்க இயலாத
கண் அவனுடையது...
திகட்டும் நறுமணம் சிறிது நேரத்தில்
மூச்சடைக்க வைக்கும்...
எது வேண்டும் என தெரியாத நிலையில் நான்....
இது தான் உனக்கு என்று திணிக்க தயாராய் அவன்....

ஏற்க தான் இருந்தேன் அவன் கைகளை...
வழி இது என்று சொல்ல ஆள் இல்லாத நிலையில் நான்...
தண்டை மாற்றியதாம் என் தாயின் வாழ்வை...
இன்று கூற ஒன்றும் இல்லை என்று
வெற்றுபார்வை பார்க்கிறாள்....
எது என் பாதை கலங்கி போய் தான் இருந்தேன்.....
கண் விழித்து பார்க்கையில் தாய் மணிமேகலை
மாற்றி இருந்தாள் நான் நிற்கும் நிலத்தை...
மணிபல்லவதீவாய்!

சென்ற பிறவிப்பயனடி...
நீ செய்யவேண்டிய காரியங்கள் பல உண்டு! என்கிறாள்
தனியே விட்டு சென்றே விட்டாள்...
நடக்கிறேன்!
அழகாய் ஒரு பெண் என் முன்...
சிரிக்கிறாள் தேவதையாய் அமைதி வருட!
திவதிலகி அவள் பெயராம்...

போக சொல்கிறாள்
ரத்னதீபத்தின் தாமரைதடாகத்திற்கு!
ஆவுபுத்திரனின் அமுதசுரபிக்காக...
ரிஷபத்தின் முழுநிலவில் வெளிவரும் கிண்ணமாம்
தர்மநெறி தவறாதவர் கையில் மட்டும்
வந்து சேரும்...
போய் வா... பசியாற்று...
என்றவளும் மறைந்தேவிட்டாள்.

சென்றேன்... சுற்றி வந்தேன்
அழகிய நிலவொளியில்
சில்லென்ற நீர் பறைசாற்றும்
நான் எங்கெங்கு அழகு என்று...
தாமரை இதழ்கள் தொட்டு பார்த்து
சிணுங்கி விலகி செல்கிறது குழப்பப் பொறாமையில்...
ஒரு புதிய மலரின் தடாக வருகையால்...
என்ன தான் நடக்கும் தெரியாது நான்...

நீர் விலகி மேல் எழும்பும் கிண்ணம்
கையை நோக்கி வர...
எடுக்கிறேன் அறியாது
இனி என் பாதை திசைமாறும் என்று!
வந்த வழியே சென்றேன்...
அரவனரின் மொழி கேட்க...
தோள்களில் எத்தனை பெரிய பாரம்...
மக்களின் குறை தீர்க்கும் பிக்குணி
இவளாம்... இனி...

பசியின் வேர் பிடுங்கி
மக்களின் ஊடே இவள் பிரயாணம்...
யானை பசியோடு வந்தவள் ஒருத்தி
காயசண்டிகை!
சோற்றமுதம் தந்து
கண்ணீர் துடைத்தேன்...
காதல் மறந்தது...
கடமை புரிந்தது
உதயகுமரன் தவித்து தான் போயிருந்தான்...
பின் தொடர்கிறான் இன்னமும்
காதல் அவனிடம் சிக்கி திணறி போய்...

மனம் வலிகளை மட்டுமே பார்த்ததில்
கண் குருடாகி அகம் ஒளிர நிற்கிறேன் அவன் முன்...
இவன் திணிப்பு இப்போது உணர்கிறேன்
சலனம் மறைந்த உதட்டைக் கொண்டு!
மழித்த தலையும் உடலை மறைக்கும் துறவறம்
தாண்டியும் அவள் பெண்மை அவனை வருடியது...
இல்லை என்ற வார்த்தையை அகராதியில் காணாதவன்
இணக்கம் என்று இறுக்குகிறான் என் வாழ்வை...

அவனை மாற்ற வழி இல்லாததால்
இவள் மாறி தான் போனாள்
காயசண்டிகையாய் உருவத்தில்...
காஞ்சனன் காண்கிறான் என்னை!
வெகு நாள் கழித்து காண்கிறான் அவன் துணையின் உருவை...
இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு..
பெரும் பசியோடு விலகி சென்றவளாயிற்றே!

விளக்கங்களுக்கு நேரம் இல்லாதவளாய்
காஞ்சனன் முன் வாய் அடைத்து நான்...
மாறியது அவன் கோபம் உதயகுமரன் மேல்
மாற்றான் மனையை கொண்டான் என பெருங்கோபம்
விழிநீர் தரைதொடும் முன்
இறந்து தான் போனான் உதயன்
வசீகரத்துடன் காதல் தீய்ந்து
தரைமுழுதும் அவன் ரத்தம் தோய...

ரத்ததுளிகள் படிந்த நான் என் உருக்கொள்கிறேன்
மீண்டும் நானாக..
காஞ்சனன் கண்கள் குற்ற உணர்வில் கறுத்து...
மனம் லயிக்காமல் கால் மெதுவாய்
அழைத்துப்போக...
மரம் ஒன்று நிழல் தர அமர்கிறேன்
கண்முன் காட்சிகள் மாற
எத்தனை நாள் முன் உறங்கினாள் என்பதை மறந்து...
அயர்ந்து விழிமூடி நொந்தாள்

வறண்ட கைதொட இமை திறக்கிறேன்
தள்ளா முதுமை பசியோடு அவள் முன்
கையேந்தி!
இத்தனை பிராயாங்கள் தாண்டி ஒன்றும் இல்லாது
நிற்கும் உயிர்கள் கண்டு
என்னுள் இருந்த இறுதி கயிரும் அறுந்து போக
நிமிர்கிறேன்...
இது வரை போர்த்தி இருந்த சுவர்கள் மெல்ல
விலகி முதன்முறை உணர்கிறேன்
என் நிர்வாணம்...

தூசாகும் நிஜங்களின் முன்
என் பணி நிதர்சனமாய்...
பசி போக்கும் சுரபி கையெடுத்ததில்
மனதில் என் பாதை தெள்ள தெளிவாய்...
பெரும் கடமை பசி கொண்டு
காயசண்டிகை போல் ஆகிய மணிமேகலை
நான் நடக்கிறேன்
பிணிகளின் ஊடே...

Tuesday, January 5, 2010

புதிய பிறவிகள்...




இந்தியா சென்று வந்தது மனதெல்லாம் இன்னும் வருடியபடி இருக்க... மிகவும் யோசிக்க வைத்த விஷயங்கள் பல இருப்பினும், அதிகம் சிந்திக்க வைத்தது என் ரயில் பயணங்கள்... அரக்கோணம் எனது சொந்த ஊர். பிறந்து வளர்ந்த மண். கிராமமும் அல்லாது, நகரமும் அல்லாத ஒரு இடை நிலை. இன்னமும் வாசலில் உட்கார்ந்து போக வர உள்ளவர்களின் நலன் விசாரிக்கும் பெருசுகள் உண்டு. ஆனால் முன்பு போல் இல்லை. மார்கழி மாதம் கோலம் போட்டாப்போட்டியோடு நடந்தது நினைவில் உண்டு. இன்றோ பல வீடுகள் முன்பு சிறிய ஒரு நட்சத்திரம்... பார்ப்போர் அனைவரின் கையிலும் ஒரு தொலைப்பேசி. தெரிந்த மனிதர்கள்கூட ஏதோ ஒரு உரையாடலில் மூழ்கி மிதந்தபடி இருக்க, வெறும் ஒரு தலையசையில் நானும் உன்னைப் பார்த்துவிட்டேன் என்பதற்காக ஒரு அங்கீகாரம். இப்படி பல பல....

என் ரயில் பயணங்களுக்கு வருவோம். சென்னையை நோக்கி செல்ல ஒரு இரண்டு மணிநேரம் பிடிக்கும். வரும் ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்று நின்று செல்லும். பலத்தரப்பட்ட மக்களை சந்திக்கலாம். எனக்கு மிக பிடித்த விசயம். FM வழியே காதில் இளையராஜா குழைந்து நெஞ்சை வருட, நான் வேலை பார்த்து வசிக்கும் ஊரில் தெருவில் நடந்தால் பார்க்க நேரும் அதே கருப்பு, நீலம், வெள்ளை போன்று அல்லாது, பார்க்கும் இடம் எல்லாம் வெவ்வேறு வண்ணம். நடுநடுவே வேர்க்கடலை, இஞ்சிமரப்பா, நெய் பிச்கேட், சூடான சமோசா இப்படி பல பல... காலை நேரங்களில் ரயிலில் செல்ல நேர்ந்த போது கண்டது பெண்கள் கூட்டம். படிக்க செல்லும் இளசுகள் ஒருபுறம் இருக்க. ஒரு 80 சதவிகிதம் பெண்கள் வேளைக்கு செல்லும் பெண்கள்.

தினம் தினம் ரயிலில் செல்வதால் கூட்டம் கூட்டமாய் அடித்து பிடித்து ஒரே இடத்தில் அமர்ந்து மெல்ல நேற்றைய நிகழ்வுகள் அசைபோடும் சினேகங்கள். குளித்த தலை ஈரம் துடைக்க கூட நேரம் இல்லாது ஒடி வரும் கூட்டம். மெல்ல ரயில் நகர காலை உணவு பகிர்ந்தபடி தொடங்கியது இவர்கள் பட்டிமன்றம். வெகு நாள் ஆயிற்று கூட்டத்தின் மத்தியில் இருந்து. கண் நிமிர்ந்து பார்த்தேன் ரயில் முழுக்க உள்ள முகங்களை. எல்லார் முகத்திலும் ஒரு கலவையான உணர்ச்சி. கொஞ்சம் அசதி, எரிச்சல், தூக்கமின்மை, கோபம், சுயபச்சாதபம், ஏக்கம், வெறுப்பு எல்லாம் வேறு வேறு விகிதத்தில்.

பேச்சு முழுக்க என்ன காலை, மதிய உணவு செய்தனர், எத்தனை மணிக்கு உறங்கினர், எப்போது எழுந்தனர் என்று தொடங்கி மெல்ல கணவன்மார்கள் பக்கம் திரும்பியது. தம்தமது துணைவர்கள் பற்றி பேசும் சமயம், முகத்தில் வன்மம். கொட்டி குமுற கிடைத்த ஒரே இடம். பேசினார்கள். பேசினார்கள்... பேசிக்கொண்டே இருந்தார்கள். சில கணவர்கள் வேலை இல்லாது, சிலர் பொறுப்பு இல்லாது, சிலருக்கு வேறு பழக்கங்கள், சிலர் காசுக்காகவே. இப்படி பேசியதில் புரிந்துக்கொண்டேன். முக்கால்வாசி பெண்களிடம் காதலே இல்லை. இணக்கம் இல்லை. கடமைக்காக துணைகளுடன் இருக்கின்றனர். ஒவ்வொரு முகமும் பார்க்கும் போது எங்கேயோ தொலைந்து போனவர்கள் போன்று, முகம் இருகி கடினமாய். இந்த கூட்டம். சிலர் நடந்த சண்டை அடிதடிகள் பற்றி சொல்ல, குழந்தைகள் மாமியார் மாமனார் நாத்தனார் ஒரகத்தி என்ற ஏனய சங்கதிகளும் பேச்சில் தடம்புரண்டது...

ஒரு அளவிற்கு மேல் மனது வலித்தது. நமக்கிருப்பது ஒரு சிறிய வாழ்க்கை. விவேக் சொல்வது போல ``இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்``. இதில் தான் எத்தனை வழக்குகள். இப்படி யோசித்தே நசுங்கி கசங்கி சென்னை வந்து சேர, சில நண்பிகள் சந்தித்தும் தொலைபேசியில் உரையாடியும் சில விஷயங்கள் தெரிந்தது. பெரிய பதவிகளில் இருக்கும் பெண்களும் மிக மனம் நொந்து பேசினார்கள். பேச்சின் சாரம்சம் நான் ரயிலில் கேட்ட அதே தான். பணம், அந்த்ஸ்து, நல்ல வாழ்க்கை நிலை என்று இருந்தும் நிம்மதியில்லை. என்ன தான் நடக்கிறது என்று மெல்ல யோசித்தேன். நண்பர் செல்வாவிடம் சிறிது நேரம் facebook வழியே பேசமுடிந்தது. நெஞ்சு பொறுக்காது அவரிடம் as usual புலம்பி சோக violin வாசித்தபோது சொன்னார், இது இப்போது உள்ள எல்லா ALPHA FEMALE களின் நிலை என்று.

அமைதியாய் பின்னோக்கி பார்க்கையில் புலப்படுகிறது சில விஷயங்கள். முன்பெல்லாம் அதாவது குகைவாசிகளாக சிக்கி முக்கி கல்லோடு நெருப்பை கண்டுப்பிடித்து இருந்தபோது ஆண்கள் கூட்டமாக சென்று வேட்டையாடி வருவார்கள். குகையில் பெண்கள் குழந்தைகளையும், உணவு, பராமரிப்பு இவைகளை மேர்பார்வை பார்த்தனராம். இன்று பெண்கள் படிப்பு, வேலை, குடும்பம் என்று எத்தனை விஷயங்களை ஒரே சமயத்தில் செய்கின்றனர். 70% ஆண்கள் (மன்னிக்கவும்) வேலையில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒட்டுண்ணிகளாய் தான் இருக்கிறார்கள்.

மனதிற்கு இணக்கம் இல்லாத கணவன் கிட்டினால் வாழ்வு நரகவேதனை தானே. எரிமலைகள் மேல் கணவனும் மனைவியும் அமர்ந்துக்கொண்டு, வெடிக்க யத்தனித்து, இந்த கொடுமையில் குழந்தைகளும் பெற்றுக்கொண்டு, மேலும் மேலும் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டு, ``அடக்கடவுளே!``. இந்த சூழ்நிலை ஒரு பெண்ணிற்கு எந்த விதங்களில் பாதிக்க நேரும் என்று தனியே எழுதுகிறேன், என் கருத்துகளை.

இதற்கு என்னத்தான் தீர்வு... உறவுகள் வெட்டியெறிய வேண்டியதில்லை. ஆனால் எதாவது செய்து இந்த பாவப்பட்ட பெண்களின் மனதிற்கு ஆறுதலும் உறுதுணையும் அளிக்கமுடிந்தால் இவர்களின் வாழ்வுநிலை கொஞ்சமாவது மேம்படும், அதற்கு என்ன செய்வது என்றும், எங்கு தொடங்குவது என்றும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

Monday, January 4, 2010

மறைவேன்...



கண் கொண்டு பார்க்கிறேன் உன்னை...
வா... வந்துவிடேன்...
எப்போது தான் வருவாயோ...
கேள்வி மேல் கேள்வி தாங்கி நீ...
என்னோடு கலந்து ஒன்றிவிடேன்...
அழுத்தமாய் அழைக்கிறாய்..
உயர்ந்த மலை உச்சி...
மெல்ல நடக்கிறேன்’
ஒவ்வொரு தடையையும் தாண்டி...
கன்னம் தடவும் குளிர்
எட்டும் தூரம் வரை நீ அகன்று பரந்து...
அழகாய் குதிக்கிறேன்
ஆசையாய் உன்னை நோக்கி!
மிதக்கிறேன் வெறுமையாய்...
அலையில் நுழைந்து வருகிறேன்
கரை நோக்கி திரும்ப திரும்ப...
என்னை தூக்கி சுமக்கிறாய்
இப்புறமும் அப்புறமும்
இடமும் வலமும்
மேலும் கீழும்
குறுக்கும் நெடுக்கும்
அடித்துக் களிக்கிறேன்...
குப்பையாய் மிதக்கிறேன்...
நீந்திக் களைகிறேன்...
மூழ்கி மறைகிறேன்...
நிராகரிக்கிறாயே என் ஆழ்கடலாய் இருந்தும்...
உன்னை ருசிக்கிறேன்.
உணர்கிறேன் மிக சன்னமாய்!
எங்கும் விரவி அடர் உப்பாய் நீ
நானும் உருக்கொண்டேன் உப்பு தூணாய்...
தளும்பி தளும்பி ஒய்கிறேன்
உப்பாய் மாறிய உதடுகளில் காரமாய்
உனக்கான புன்னகை...
கடல் கொண்டது
கரைத்தது...கரைகிறேன்
ஒரு துளியாய் துவங்கி ஆழ்கடலான
உன்னில் அடங்கி...
இதோ
பெருவெள்ளமான உன்னை
சிறுதுளியான என்னுள் அடக்குகிறேன்...
இப்போது தான் புரிகிறது
நான் அறிந்த ரகசியம்...