Friday, April 9, 2010

இன்பத்தில் ஓர் நாள்!



எப்போ அப்பா நான் பெருசா வளருவேன்?
பத்து வயதாய் நிரம்பி வழிந்த சிரிப்பில்
தந்தையின் கையில் படுத்து
வியர்வை வாசத்துடன் மார்பில் முகம் புதைத்து
கைவிரல் நெஞ்சின் முடி திருகியபடி..

சிரித்து பதில் சொன்னது காதில் ஒலிக்க..
தனித்து படுக்கையில் இருக்கும் இன்றைகளில்
மீண்டும் தேடுகிறேன் அதே வாசத்தை!
பார்க்கும் கைகளில் எல்லாம்
வெளுத்த வயதுகளின் வெளியில்...

சுகிக்கும் ஈர நாக்குகளும்
விரலில் சுருட்டப்படும் தோல்மடிப்புகளும்
உணராது வெறுமே வெளிவரும் முனகல்களும்
உராயும் கணங்கள் முடித்து எழுந்துபோகும் உடல்களும்
தோற்றார்கள் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
அதே அறையில் ஒளிந்திருந்த பத்து வயது அவளை
கண்டுப்பிடிக்க இயலாது...

அழுக்கு மனிதவாடையில் மூழ்கும்
ஈர படுக்கையில் கண்களற்ற தீண்டல்களில்
தொலைந்தபடி மனக்கண்ணில் தீட்டுகிறாள்
தினம் ஒரு படத்தை...
ஒரு கணம் பனிமலையின் உச்சத்தில்
வெள்ளை சிறகு விரிக்கும் பருந்தாய்!
மறுகணம் பவள பாறையின் மத்தியில்
மிதக்கும் அழகு கடல் ஆமையாய்!

நிற்கும் சமயங்களின் நெடி தாங்காது
மூழ்கும் கனவுகளில் வந்து போகிறார்!
கைதொடா தூரத்திலேயே நின்று
முகம் பார்க்காது அவளை தாண்டி
``பாருங்க அப்பா என்னை!``என
போகும் அப்பாவின் பின்னாலே
கதறிக்கொண்டு ஓடுவதில் கழிகிறது
இவள் இரவுகள்!
எப்போ அப்பா நான் சிறுசா மாறுவேன்?