Sunday, November 1, 2009

தீ மூட்டிவிடு...




வறண்ட வெற்று பாலை நிலம்
மெத்தென நெருப்பு
கொழுந்து விட்டு எரிய
ஒற்றையாய் நான்...
என்னை கொளுத்த உனக்கு
தீப்பந்தம் வேண்டாம்!
எரிமலை குழம்பு வேண்டாம்!
கைப்பிடி கானல் நீரும்
பசும்புல்லின் நுனியும் போதும்...

விடிந்தும்
இன்னும் கொழுந்துவிடுவேன்...
என் வேர்கள் சூறாவளியில் நிலை குலைந்து...
உயிர் போராட்டத்தில் நான்
படபடத்து...
மரணத்தை நோக்கி...
சட்டென மரித்தால் நன்றே...
ஒரு மழைத்துளி பட்டால் மரிப்பேனோ?
என் தவம் கண்டு
தரை நோக்கி வந்த மழையும்
நான் பார்க்கையில்
மீண்டும் விண்ணோக்கி...

பார்...
உன் முத்த முட்கள் பட்டு
கிழிந்து தொங்கும் என் கன்னத்தை...
கேள்...
உன் நிசப்த வெடி இரைச்சலுக்கு
என் இதயம் துடிக்கும் தாளத்தை...
ரசி...
என் வான நட்சத்திரங்கள்
உன் கண் பார்த்து கடைசியாய்
கண்சிமிட்டி
கல்லறையில் இறக்கும் நொடிகளை...

ஒரு வேளை
என் கனவுகளை தின்று
என் கண்ணீரை குடித்தால்
சத்தமின்றி மடிந்து இறப்பேனோ...
தீ சிறகுகள் மெது மெதுவாய் திசுக்களை
சாம்பலாக்கி மெல்ல
காற்றுடன் கை கோர்த்துவிட்டு
நகைக்கும்...
மொத்தம் எரிந்தும்
ஓரத்தில் ஒரு நப்பாசை...
தீ மூட்ட வந்த உன் கை
தீ அணைக்க வருமென்று...

நெருப்பு என்னை கரைக்கும் வரை
உன் அணைப்பை தேடி கொண்டே...
நீ இல்லை
இன்னும் சோகத்தின் பிடியில்
என் முடிகற்றைகள்
கருப்பு தீக்கனலாய்
எரிந்து கொண்டு...
இது தான் என் கடைசி இரவென்றால்..
முற்றுபுள்ளி வைக்கும் முன்
நான் பாடம் எடுக்கிறேன்
என் அன்பே...
உனக்கு...
ஆசை உடன்
எப்படி கொலை செய்வது என்று...