Wednesday, November 11, 2009

காதலிக்கிறேன்....

உச்சகட்ட இன்பத்தில்
திளைத்து எழுந்த நேரம்
உணரவில்லை...
வித்து சுமக்கும் என் கருவறை என்று...
வரவிருந்த நாட்களின்
காலையில் எழும்போதே
தலை சுற்றி பசி இல்லை....
தட்டாமாலை வார்த்தைக்கு
முழுதான அர்த்தம் உணர்வேன்...
காதலிக்கிறேன்...

உடலும் மனமும் சோர்ந்து
என்னுள் இன்னொரு உயிர்...
அழகான என் ஒட்டுண்ணி...
தினம் தினம் என் ரத்தம்
உறிஞ்சி சதை தின்று
என்னுள் ஆழமாய் வேர்கள் புதைந்து
வெகு வேகமாய் வளரும்
என் விருட்சம்...
காதலிக்கிறேன்...

இதுவரை அறியாத விஷயம்
ஒரே மாதத்தில் இதயம் துடிக்கும் என்று
மூன்று மாதத்துக்குள் கை கால் வளர்ந்து
மரபாச்சி போல ஒரு விரல் நீள குழந்தை...
வீங்கி நின்ற வயிறு தொடும் வேலை
என் மகவும் உணர்ந்து
செல்லமாய் இடிப்பான்....
காதலிக்கிறேன்...

யாரும் இல்லாது தனிமையில்
நடக்கும் போதும் என் கூட்டுக்குள் நீ
என் துணையாய்...
என் சிரிப்புடன் அழுகையுடன்
என் பசியுடன் உறக்கத்துடன்
எல்லாவற்றிலும் என்னோடு
என்னுள்ளே நானே நெய்த
என் கூட்டு பூழுவாய்...
காதலிக்கிறேன்...

ஒட்டி இருந்த வயிறு
மெல்ல மெல்ல நான் இருக்கிறேன் என்று எட்டி பார்க்க...
என் கால் கட்டைவிரல் பார்த்து
நாட்கள் பல...
ஆசையாய் தான் இருக்கிறது
தலையணை வயிற்றில் அழுத்த
ஒரு முறையாவது தூங்க....
இடுப்பு வளைந்து....
வயிறு தள்ளி... நடையும் மாறி...
ஆடி ஆடி நடக்கிறேன்....
காதலிக்கிறேன்...

உயிர் பிடுங்கும் வலி...
உடல் பிளக்கும் பிரளயம்...
எல்லா உணர்வும் மறுத்து
வேதனை மட்டுமே மூச்சாய்....
உதிரம் கொட்ட
தசை விரியும் துளி துளியாய்...
கர்பக்கூடு திறந்து
வெளிவருவாய்
உன் கருவறை வாசம் விட்டு...
மெதுவாய் உள்ளிழுக்கிறேன்
வெகு நாள் கழித்து
நீண்ட ஒரு மூச்சு...
வியர்வை மழையில் நனைந்து
உயிர் போய் வந்தது வாஸ்தவம் தான்...
ஆனாலும்
காதலிக்கிறேன்...

தாய்மை புனிதம்....
துரோகங்கள் வெறுப்புகள்
கண்ணீர்கள் சோகங்கள்
குழப்பங்கள் கோபங்கள்
என கருப்பு வலிகள்
சாட்டையை சுழற்றினும்....
இன்னும் கறுக்காத என் பிரயாணம்
சொல்லி புரியவைக்க இயலாது...
வன்மமும் புணர்ச்சியும் தாண்டி
தொட இயலா என் மோன நிலையை...
என்றும் காதலிக்கிறேன்...