Saturday, October 23, 2010

மஹோன்னதம்!!!



வெகு நாளாய் எழுத முற்பட்டு எழுதாது விட்டு போன
வார்த்தைகள் சலசலக்கிறது கடல் அலை போல
எழுதுக்கோலின் உள்ளிருந்து!
மறுபடி கேட்கிறேன்; யாரிடம் போய் சேர இத்தனை அவசரம் என்று?
தொலைத்தூரம் விலகி தொலைந்து போயிருந்த
ஒருவனிடம் சொல்ல விழைகிறோம் என்கிறது ஓங்காரமாய்!

``விட்டு போன அவனிடம் என்ன பிடித்தது உனக்கு?`` நான் கேட்க,
கருப்பு மை மழைதுளியாய்
என் வெள்ளை படுக்கையில் தூறி
என் அறையெங்கும் மிதக்கிறது...
கண் தழுவும் திசையெங்கும் வெகுதூரம் வரை
எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று மோதியபடி மிதக்க...
அவைகளை விலக்கியபடி நடக்கிறேன்!

கோபத்திலும் சிரிக்கும் அவன் கண்கள் பிடிக்கும் என்றவை
இருட்டில் மின்மினிப்பூச்சியாக மாறி பறந்துவிட்டது!
மீசையின் உள்ளே ஒளிந்திருக்கும் சிரிப்பு பிடித்தது என்றவை
இறக்கையில் வண்ணம் தீட்டியபடி எழுத்து கூட்டுக்குள் இருந்து
பட்டாம்பூச்சியாய் வெளிப்பட்டு அவனை தேடி புறப்பட்டது!
அவன் தீண்டல் கரடுமுரடான பட்டு போல என்றவை
அவன் வீட்டின் அருகே ரீங்காரமிட போவதாய்
சிறகு முளைத்து தாவி சென்றுவிட்டது!

அவனை ஏன் பிடித்தது என்று தெரியாத மிச்சமீதி வார்த்தைகள்
என் இரவில் விழித்துக்கொண்டும்
அவன் பகலில் தூங்கிக்கொண்டும்
என் வீட்டு விட்டத்தில் அயர்ந்து சோர்வாய் காத்திருக்கிறது!
அவனுடைய காதல் கடலாய் மாறி என் வீட்டின் கதவின்
முன்னே காத்திருப்பதாய் அவன் எழுதிய கடிதம்
என் காதல் காற்றாய் அவன் ஜன்னல் திறக்க காத்திருந்த போது
வேறு திசை அடித்துப்போவதாய் பார்த்தவர்கள் சொன்னார்கள்!

கண்ணாடி வீட்டில் இருந்து பார்க்கையில்
என் தோட்டம் முழுக்க அவனால் உருமாறிய வார்த்தைகள்
வெவ்வேறு வண்ணம் தோய்ந்து பறந்து கொண்டிருக்கிறது
வராது போன அவனை தேடி!
ஜன்னல்களில் அமர்ந்திருக்கிறோம்
நானும் சிறகு முளைக்காதவைகளும்
என்றாவது புரிப்படும் ஏன் பிடித்தது அவனை என்று!
பிடித்ததின் புரிதலில் முளைக்க இருக்கும் இறக்கைகளை
முதுகின் பின் தேடியபடி!