Friday, February 25, 2011

வெற்றிடம் தேடி!!!



தேடியபடியே கழியுமோ என் பொழுதுகள்...
புதிதாய் முளைத்திருக்கும் பதியங்களையும்
இறந்து அழுகும் சிலவற்றையும் புதைக்க இடம் தேடியபடி!
பார்க்கும் என் வெளி முழுக்க கல்லறை தோட்டம்...
மனதுள் வெற்றிடம் அற்று போய்விட்டது ஏனோ?

கண்கள் பார்த்ததில் விதை விழுந்து,
மெல்ல சிரிக்கையில் துளிர்விட்டு,
பேசி புரிததில் தளிர்த்து,
ரசித்து ருசித்ததில் இளவண்ணங்கள் தாங்கி,
அழகாய் வளர்ந்து நிற்கிறது
ஒருபுறம்
என் காதல்கள்!

பிடித்ததன் காரணங்கள் மறந்து
பேசுவது குறைமட்டும் கூற என்று ஆகிப்போய்
கேள்வி இல்லா கோபங்கள் தாங்கி
அன்பும் அமைதியும் குப்பையில் போட்டு
ஆசையையும் கொன்றதில்
இறந்து அழுகி போகிறது
ஒருபுறம்
என் காதல்கள்!

இறப்பும் பிறப்பும் காலசுழற்சி
என்பது புரிந்துவிடுகிறது!
காதல்களுக்கும் அவை உண்டென்பதை
மெதுவாக உணர்கிறேன்...
வெற்றிடம் தேவை!
இறந்த வயதான காதல்களையும்
இதோ கண்முன் பிறக்கின்ற காதல்களையும்
சுமந்து நிற்கிறேன்
புதைக்க இடம் தேடியபடி!