Wednesday, January 9, 2008

தவம்!!!

எத்தனையோ விதம் உண்டாம் தவத்தில்
எல்லாம் கடவுளை சேர வழிகள்.
என் மகனாய் பிறந்த என் தெய்வமே!!!
அது எல்லாம் நான் அறியவில்லை,
கடவுளை அடைவேனோ,
அதுவும் தெரியவில்லை!!!

ஆனால்,
நான் இதயம் கீறி கண்ணில் உதிரம் வழிய
உன்னை பார்க்க என்னை கட்டி பிடித்து
உன் கண்ணும் கலங்க
உன் பிஞ்சு குரலில்
எனக்கு ஆறுதல் சொல்லும்
என் செல்லமே!
இனி நூறு நூறு ஜென்மமும் நீ வேணுமடா எனக்கு...
உன் பால் வாசத்தில் மெய் சிலிர்த்து பரவசமாகும்
எஞ்சி உள்ள என் ஜீவன்...
உன்னால்...
உன்னால் மட்டும்...

பயத்தில் நெஞ்சு படபடக்க,
அடுத்து செய்வதறியாது மருண்டு
சுற்றும் இருள் சூழ கலங்கும் போதும்
உன் பட்டு கையின் ஸ்பரிசத்தில்
தைரிய அமுதம் தரும் என் உயிரே...
உனக்காக ஒரு கோடி முறை இறக்க நான் தயார்!
இறந்தும் எழுவேன்...
உன்னால்...
உனக்காக மட்டும்...

எத்தனை போர் முனையில் நின்றாலும்
எத்தனை முறை தோற்றாலும்
எல்லாம் இழந்து நின்றாலும்
நெஞ்சில் இன்னும் வாழ வேட்கை மிச்சம்!
உன்னால்...
உனக்காக எப்போதும்...

என் துயரோ, தனிமையோ, பயங்களோ,
கேள்வி குறிகளோ, கண்ணீரோ, தொய்வுகளோ,
உன்னை தாக்காது என் மகவே!
உன்னை சுற்றி கேடயமாக என்றும் நானே...
என்னால் சொல்ல முடியாது போகலாம்
ஆனால்
என் மகனே!
இந்த நொடியும், இனி ஜனிக்கும் ஒவ்வொரு நொடியும்
என் மூச்சு காற்று
உன்னால்...
உனக்காக மட்டும்...