Friday, February 8, 2013

அவை தின்னப்படுபவை தான்!!!



நான் முதல் இல்லை!
நான் கடைசியும் இல்லை!
நீயும் அதே!
நான் என்பதற்கும் நீ என்பதற்கும்
வலிக்கும், சிலிர்க்கும்..
அவை சிரிப்பவை, அழுபவை..

பெயர் என்ற ஒன்று வாடகைக்கு கொஞ்ச நாள் தங்கிசெல்லும்
நான் என்பது அதுவாக மாறும் வரை!!!
ஒன்றை ஒன்று விழுங்கும்..
மண் விழுங்கும் விதை
அதை விழுங்கும் மரம்
அதை விழுங்கும் பறவை
அதை விழுங்கும் மனிதன்
அதை விழுங்கும் மண்...

நான் என்பது நிற்காமல் ஓடுகிறது
மற்ற நான்களுடன்!!!
கலவியில் கூடுகிறது
சண்டையில் கொல்கிறது
இன்று போன நானை சுற்றி
நாளைக்கு போக இருக்கும் நான்கள் கட்டி அழுகிறது

இருக்கும் வரை நான் என்பது மட்டுமே மையப்புள்ளி
நான் என்பதை சுற்றியே சூரியனும் பூமியும்!!
நேரம் மட்டும் தான் வெவ்வேறாகிறது
ஆனால் எல்லாமே இங்கு தின்னப்படுபவை தான்
ஒன்றும் பாக்கியில்லை..