Monday, July 12, 2010

நான் ஆனதால்....


வலைகள் முளைத்து நகரும் தரை என் தேசம்!
சிணுங்கல் அற்ற நீர் குமிழியில் மிதக்கையில்
மெதுவாய் கேட்டது ஈரவிரலின் பிராண்டல்!
என் சுவாசம் நீரிலும்...
அதன் சுவாசம் நிலத்திலும்...
காலிடுக்குகளில் மணல் துறுவியபடி நின்றது அது.
அகல கண்விரித்து கன்னக்குழிகளில் முத்து வைத்தப்படி
சிரிக்கிறது என்னை பார்த்து.
சின்ன கை... சின்ன கால் தாங்கி!
செங்குத்து பாறைகள் கடலுக்குள் இருந்து
முளைத்தெழ, நான் அதன் மேல்!
மெல்ல அருகில் வரும் தத்தி தத்தி...
கேட்க கேள்விகள் பல அடங்கிய பெரிய கண்களோடு!
கை நீட்டி தொடுகிறேன்!
சொல்லொணா சிலிர்ப்பு உடலில் பரவ
ஆரத்தழுவுவேன்!
முத்தமிடுவேன்!
உச்சி முகர்வேன்!
முதன்முதல் இருதயம் துடிப்பதை உணர்கிறேன்!
அதுவும் சிரிக்கிறது, முத்தமிடுகிறது.
என்னோடு வா என்று நான் அழைக்க
என்னோடு வா என்று அது அழைக்க
யார் யாரோடு போவது என்று பெரும் கேள்வி!
நான் மீனானதால் தரையில் சுவாசிக்க இயலவில்லை!
என் மகவு மானுடமானதால் நீரில் வசிக்க இயலவில்லை!
கண்ணீரும் கடல் உப்பில் கரைய பிரிகிறேன்!
சல்லடை மணல் துகளும், ஈர விரலின் நுட்பமும்
மேல்வீசிய வாசமும் மட்டும் தாங்கிய
நினைவு வலைகள் மட்டும் புசிக்கும் மீனாகிறேன்!
வலைக்குள் இருந்து மீள்வேனோ மாள்வேனோ...