Wednesday, November 25, 2009

அடுத்த நிறுத்தம்... விடியல்!

கண் எரிகிறது...
நெஞ்சும் கூட சேர்ந்து கனலாய்...
வயிற்று பசி இதன் முன் வெகு லேசாய்...
எஞ்சியது வெறி மட்டுமே...
சாதிக்க!
ஜெயிக்க!
நிரூபிக்க!
கானலாய் என் நிகழ்காலம் எரிய
என் எல்லாமும் அதில் பொசுங்கி...
எதிர்காலம் என் முன் சம்மணம் இட்டு...

காறி உமிழ்ந்த எச்சில்களின் தாக்கத்தில்
உழன்றிருக்கிறேன்...
வீசி எறியப்பட்ட அலட்சிய பார்வைகளின்
அறை வாங்கியிருக்கிறேன்...
அவமான வார்த்தைகளின் சவுக்கடி
ருசி பார்த்திருக்கிறேன்...
நட்பாய் எண்ணி நம்பி வாங்கிய
துரோக முத்தக்குவியல்
சேர்த்து வைத்திருக்கிறேன்...
சொந்தங்கள் ஓரமாய் ஒதுங்கி நின்று
கைக்கொட்டி நகைக்க தயாராய் இருக்க
நான் மட்டும் ஒற்றையாய்...

மூழ்கும் புதைமணலில் மூழ்கி
தத்தளித்த கைகளில் ஒன்றுமே
சிக்கவில்லை
என் நேற்றைய பொழுதுகளில்...
வெற்று காகிதம் ருபாய்...
ரத்தமும் சதையையும்
அநியாய விலைக்கு தராசில்
விலை போடும்...
அன்பையும் ஆசைகளையும்
கழிவாய் தூக்கி போடும்...
அவை நிர்ணயிக்கும்
யார் வென்றவர்...
யார் தோற்றவர்...

என்னை நிறுத்த என் விதிக்கு
வலுவில்லை...
நான் எழுகிறேன்
நான் நிற்கிறேன்...
என்னை பார்த்து சிரிப்போர் முன்...
போரில் வீழ்ந்தது உண்மை தான்...
விழுந்தேன் பல முறை
விழுப்புண்கள் பல தாங்கி...
காயங்கள் புரையோடும்
சிரிப்பவரெல்லாம் முன்பின் போர்க்களம்
ஏறாத அமைதியான கோழைகள்...

இன்னும் வாழ வெறி மட்டுமே
மூச்சாய்....
இதயத்துடிப்பாய்...
என் கூச்சங்கள் பயங்கள்
தனிமைகள் கேள்வி குறிகள்
கொன்று தின்று
ஓடி கொண்டே நான்...
மெது மெதுவாய் வாழ்க்கை
வெளிச்சம் தலை நீட்டும்
நன்று அறிவேன் இந்த நொடி
என் அடுத்த நிறுத்தம்
விடியல்....
நிற்கும்
வெற்றி ஏந்தியபடி ..

Thursday, November 19, 2009

என் பட்டாம்பூச்சிக்கு ஒரு குட்டி கதை...

என் தங்க சிட்டு,
அம்மா சொல்ற ஒரு ஆசை கதை...
தூங்கணும் அதுக்கு அப்புறம்...
தொல்லை பண்ணாம...
ரொம்ப நாளைக்கு முன்னாடி
ஒரு அழகான தேசம்...
சிரிப்பு மட்டும் தான் அங்கே மொழி...
அந்த அழகான ஊர்ல
ஒரு சந்தோஷமான குடும்பம்...
அந்த வீட்டில ஒரு பொண்ணு
நம்ம கதாநாயகி...
கருவாச்சி தான்...
எப்பவும் சிரிப்பா...
திடீர்னு அந்த ஊர்ல ஒரு புயல் அடிக்க
அந்த வீடு ஒடஞ்சி போச்சாம்...
புயல் அடிச்சதும் ஆளுக்கொரு பக்கம்
பிரிஞ்சு போய்ட்டாங்களாம்...
பாவம்!
அந்த பொண்ணு வேற ஒரு நாட்டுல போய் விழ...
அங்கேயே இருக்கா... சோகமா....
ஒரு அழகான வீரன் வந்து
கல்யாணம் பண்ணிக்க
கொஞ்சம் சந்தோஷமா இருக்கா....
இதுல ஒரு குட்டி ராஜகுமாரன் பிறந்துட்டான்
அந்த புள்ளைக்கு...
பட்டு குட்டி...
அழகன்....
ஆசையாய் எப்பவும் இருக்க
திரும்ப ஒரு பூகம்பம்...
அவ ஒரு பக்கம் போக
அவளோட செல்லகுட்டி இன்னொரு திசையில்...
இப்போ தான் தொடங்குது
அவளோட பிரயாணம்
அவளோட குழந்தையை தேடி...
ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி
ஏற முடியாத ஒரு மலையில
ஒரு சாவி...
அந்த சாவி தேடி போயிட்டே இருக்கா அவ.
இனிமே தான் சாவி தேடி
சாவி சேர போற பூட்டு தேடி
பூட்ட தொறந்து
அதில இருக்க வரைபடம் எடுக்கணும்...
கண்டுபிடிக்கற திசைகாட்டியும்....
சாவி தேடுற வழியெல்லாம்
நெறைய ஆபத்து...
ஆனாலும்
கெட்ட மிருகத்தை எல்லாம் கொன்னுபோட்டுட்டு
பசியோட இருக்கா செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டு
வர ராட்சசர் எல்லாம் வதம் பண்ணிட்டு
போய்கிட்டே இருக்கா..
அந்த வரைபடம் அவளை கூட்டி போகும்
அவளோட அந்த பிஞ்சு இதயத்துகிட்டே...
அந்த இதயத்தை திரும்ப எடுத்து
தனக்குள்ளே வச்ச தான்
அவளுக்கு உயிரே வரும்...
அது வரை நடந்திட்டே இருப்பாளாம்...
செல்லம்...
கண்ணா...
தூங்கிட்டியா பட்டு...
நாளைக்கு திரும்ப கூப்பிடுறேன்
இன்னொரு கதையோட...
இப்போதைக்கு என் தொலைபேசி
மட்டுமே கடக்கும்
ஏழு கடல் ஏழு மலை...
சீக்கிரம் நானும்...
அதுவரை
உன் எச்சில் முத்தத்துக்காக
ஏங்கிட்டு இருக்கும்
சிரிப்பு தொலைந்த
கருவாச்சி
உன் அம்மா...

மன்னித்து விடு...

சிறு வார்த்தையின்
பிரம்மாண்டமான
வெற்றிடம்...
மன்னிப்பு...
ஏதும் வாழ இயலாத உயிரற்றபூமி...
சரியான அளவுகோல் இல்லை...
கையில் எடுப்போரின் தராசாய்...
பண்டோராவின் பெட்டியாய்...
கோபம், வெறுப்பு,
திமிர், பொறாமை,
பாசாங்கு, காழ்ப்பு,
கொடுஞ்சிறகுகள் ஏற்றி
சிரிக்கும் குழந்தைகளை
கொட்டிவிட்டு
மரணத்தை ருதுபடுத்தும்...
அன்பை இழந்ததும்
நிழல் தொலைக்கும் உயிர் நாம்...
காலக்கூடுகளின்
கைதிகளாய்...
வெட்டி எடுக்க முடியாத
உறைந்த பனி...
கண்களுக்கு பதில்
கண்ணாடிகள்
கூண்டாய் மாற
முகம் பார்ப்போம்
எதிர் எதிர்...
சுவாசிக்க என் காற்று மட்டுமே எனக்கு....
உன் கூண்டு உனக்காய்...
கூண்டுகள் குழையும்
கூண்டுகள் நெளியும்
கூண்டுகள் உடையாது..
உயிர் நெருக்கும் மௌனம்
தள்ளிவிடும் தூரத்தில்...
நம் கூண்டுகளை...
எதிரேயே இருந்தும்
சிறு நீரோடை ஆகும்
செங்குத்து பள்ளதாக்குகளாய்...
இப்போதெல்லாம்
கண்ணாடியில் உன்முகம்
பல நிறங்களுடன்...
பயம் தான்..
என் கூண்டின் சூரியனாய்...
முகத்தின் மேல்
எண்ணிறைந்த நிலை...
நிமிடம் முகமூடி மாறிவிடும்
முதுகெலும்பின் ஒவ்வொரு
படியாய் என்
தனிமை பயம்பற்றி...
ஓடிவர எண்ணிய கூண்டு
இப்போது பின்னோக்கி....
கரைந்து....
திரும்ப மறுக்கும் அன்பானால்
சிதைந்துவிடும்
என் அழகு சிறை...
கருணை கம்பிகள் இல்லை அதில்...
சொல்லியே ஆகவேண்டும்...
இதை மட்டும்!
அன்பை மட்டுமே கொடுத்த
அழகு இதயங்களில்
காயங்கள் ஏற்றிய
என் துரோக முத்தங்கள்
என்னையும்
மாற்றித்தான் விட்டது
அருவெறுப்பான
அழுகும்
வெறும் ஒரு
தழும்பாய்...

Monday, November 16, 2009

நான் வைஷாலி....

வறண்ட அந்த பிரதேசத்தை
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ....
என் பிறந்த பூமி...
கப்பல் மெல்ல கரையை
விட்டு நகர நகர புள்ளியாய்
நான்
வைஷாலி...
நீரில் கலையும் என் பிம்பம்!
நிலவொளியில்.
நின்று பார்க்கிறேன்...
என்ன சொன்னார் அப்பா...
என் கையில் தானே எல்லாமே என்றார்...
அங்க நாட்டு அரசர் அல்லவா....
எப்போதும் ஆசையாய் அவர் கரம்பற்றி பேச தோணும்...
என் ஓவியங்களை ஒரு நாளும் பார்த்ததில்லை...
ஆனால் அம்மாவின் மீது பிரியம் தான்...
இரவு வேளையில் மட்டுமே புழங்கும் தாய்...
லோம்பதரின் ஆசை நாயகி அல்லவா ...

நீர்மேகம் மூண்டு இருண்டது கண்களில்...
அக்காவை விட இவள் அழகு தான்
ஆனால் எப்படி பேசிவிட்டாள்...
வெறும் ஒரு சதைபிண்டம் போல்..
தடித்து மெத்தென எப்போதும் பிளந்து தான் இருந்தது
அவள் அழகு அதரங்கள்...
மருண்ட கண்களும்
மல்லிகை மணமும்
தனங்களும் ப்ரிஷ்டங்களும்
தாங்கும் மெல்லிய இடையும்
வளைந்த பாதையாய்........
குழந்தை தானவள் இன்னும்...

அக்காள் சாந்தா
பட்டத்து இளவரசி...
ராமரின் தங்கை, தசரதர் புத்திரி,
லோம்பதரின் வளர்ப்பு மகள்...
இவளை பார்த்தவர் அப்படியே
ஆசை அதிர்ச்சியில் நிற்க
அக்காளுக்கு புரிவதில்லை...
இது அவள் தவறில்லை என்று...
ஆசைநாயகி மகள் தான்
ஆனாலும் தங்கை தானே...
ஏன் இத்தனை காழ்ப்போ?
தனிமை எனக்கு ஒரே தோழி...
என் செல்ல மழையும் தான்...
மழை வாசம் மிக பிடிக்கும்!
குளக்கரையில் அமர்ந்து
சில்லென மழையில்
சூடாய் என் கரிக்கும் கண்ணீர் அடித்து போவதை
உணர்வது பிடிக்கும்...

அலையும் கூந்தலை
ஒதுக்கியபடி இருண்ட மேகம் பார்க்கிறேன்...
மழை பொய்த்து தான் போனது
இந்த வருடமும்...
செய்யாத யாகம் இல்லை...
பாவம் மக்கள்...
ஒரே ஒரு மார்க்கம் தான் உண்டாம்...
ராஜகுரு சொன்னால் மீற யார்?
என் தாய்க்கும் ஒரு இடம் அரசவையில்...
எனக்கும் மகள் என்று ஒரு அங்கீகாரம்...
இத்தனை நாள் எல்லா கலையும் கற்று தந்த
தாய் சொன்னாள்...
'' அப்பாவுக்காக, செல்லம்! ''...

ரிஷ்யஸ்ருங்கன்........
எப்படி இருப்பான்?
ஊர்வசியின் மகனாமே...
முனிவர் விபபுகர் வளர்த்த அழகனாம்..
அவன் வந்தால் நிஜத்தில் மழை வருமோ?
பெரிய தவசீலனாமே.... சபிப்பானோ?
சக மனித வாடையே அறியாதவன்...
பெண்மை என்ற ஒன்று உண்டு என்றே அறியாதவன்...
இவனை நான் காதலித்து அழைத்து வரவேண்டுமாமே....
காமசாஸ்திரம் படித்தவள் தான் எல்லா இளவரசிகள் போல...
ஆனால் இவளும் ஆண் வாடையே பார்க்காதவள் தானே...
கப்பல் மெதுவாய் தளும்பிய படி போக
இவள் மனமும்
அதனோடு தாளஜதியில்...

எட்டியது கரை...
கண் தடவும் மயிலிறகு பசுமை
இத்தனை அழகா இந்த இடம்?
மூலிகையும் மண்வாசமும் பூக்கள் சிரிக்கும்
வாசம் கலந்து ஒரு ஈர நறுமணம்..
அம்மா சொன்னது நினைவில்...
மூன்று நாளில் வந்துவிடவேண்டும்
நடக்கிறேன் ...
பட்டு பாதம் புல்லில் பட...
மெல்லிய நடுக்கம் மயக்கம்
நடைதடுமாறி....

பிரமித்து நின்றேன்
வெள்ளி நீர்வீழ்ச்சி...
காணாத காட்சி
கணங்கள் விழுங்கி...
மெல்ல கண் திருப்ப
இதோ அவன், ரிஷ்யஸ்ருங்கன் ...
நீரில் மெல்ல அவன் திரும்ப
இப்போது புரிந்தது எனக்கு...
தோள் கண்டு தோளே காண்பது என்ன என்று...
அவனும் திரும்ப, கண் கவ்வினான்...
மெல்லிய சிறகாய் உடலில்
தழுவியும் தழுவாது நின்ற உடை...
மறைத்தும் மறைக்காத தேகத்தை
முதல் முறை பார்க்கிறான்....

இவன் தேவதையின் மகன் தான்....
முழுமையான ஆண்...
நான் பார்க்கும்போதே
நீர்விட்டு கரைநோக்கி வர
ஸ்தம்பித்து நிற்கிறேன் ...
அரசவையில் கேடயம் பட்டுபீதாம்பரம்
வாள் தாங்கி நின்ற வீரர்கள் அழகு என்று எண்ணிய
அவளுக்கு இன்று உரைத்தது
உடை களைந்தும் ஆண்மையின் ஆதிக்கம் உண்டு என்று...
கண் விரிய அருகில் வந்தான்...
ஈரவிரல் நீட்டி கன்னம் தொட்டான்!
கேட்கிறான் இப்போது
" நீ என்ன ?"
விரல்கள் முகமெங்கும் கோலமிட...

" நான் பெண் "...
" உன் எதிர்பதம் "...
பற்றியெரிகிறது இவன் விரல் போகும் இடமெல்லாம்...
அவன் கை அவளை வளைக்க
நின்றது சுற்றும் பூமி...
நீருக்குள் அழைத்துபோனான்...
சிறுகுழந்தையின் வியப்போடு..
சிரிப்பு வந்தது...
தீண்ட அவன் விரல் போகும் வழியெங்கும்
அவன் உதடுகள் ஊர்ந்தது....
மெல்ல உணர்ந்து ...
மெல்ல மூழ்கி ...
மெல்ல இறந்து ...
ஒரு கணம் மென்மையாய்
மறுகணம் மூர்க்கமாய்...
கண்செருகி
முழுவதுவமாய் வியாபிக்கிறான் .....

கூடல் சுகம் பற்றி பக்கம் பக்கமாய் படித்தவள்
கை பற்றி அழைத்து போக ...
பித்தானான்!
இவள் காமபாடத்தில்...
புதிய வாழ்வு...
முதன்முதலில் ஒருவன்
அங்கீகரிக்கிறான்....
இங்கு இவள் பரத்தையின் மகள் இல்லை...
இவள் ஒரு உயிர்...
சட்டென பறக்கிறாள்....
'' நான் தேவை இவனுக்கு'' ...
'' என்னை எனக்காகவே பிடித்து இவன் ''....

எடுக்க எடுக்க குறையாத அமுதசுரபியாய் இவள்..
காயசண்டிகையாய் அவன்...
பெரும் பசி...
உடல் நொந்தது...
முரடன் இவன்...
மனசு இனித்தது...
ஒரு நொடி பிரிய விடாமல் கரத்தில் சிறை வைத்தான்...
பேரின்ப தவத்தில் திளைத்து வாழ்ந்தவன்
இந்த பேதையின் மடியில் சிற்றின்ப போதையில் மிதந்து...
மூன்று நாட்கள் நொடியில் மறைய
செத்து மடியும் வறட்சி நினைவில்...
" விடை கொடு, அன்பே "
மனதில்லாமல் கேட்டேன்...
இவன் வனம் இது!
எனக்கு இங்கு இடமில்லை ...
இவனை இங்கிருந்து பிரிக்க மனமில்லையே, எனக்கு..

சூறாவளிகளில் கூட நின்று தவம் செய்தவன்
கலங்குகிறான் முதன் முதலில்...
'' நானும் வருகிறேன்'' என்கிறான்
புதியதாய் பிறந்தவளாய்
மலர்கிறேன் ...
உதடு பற்றி நன்றி உரைத்தேன்
மௌனமாய்...
கனவுகள் கண்களை கொள்ளைகொண்டது
அன்பு
இளமனது எங்கும் பரவி...
இவன் கை பற்றி இவள்...
முதன்முதலாய் எனக்கென
ஒரு உலகம் பிறப்பதை உணர்கிறேன் !
நாடு திரும்புவோம்... மழை வரும்...
காடு திரும்புவோம்... காதலாய் வாழ்வோம்...
அவன் சொல்ல கண்கள் பணிந்தேன்!

கப்பல் நாடு திரும்ப
துறைமுகம் முழுக்க தலைகள்...
நட்ட நடுவே பெரிய மேடை...
இவன் முகம் சற்றே மிரண்டு!
கண்டதில்லை மக்கள் கூட்டத்தை...
அவன் கைப்பற்றி
கண் நோக்கி சொல்கிறேன்
'' நான் இருக்கிறேன் கண்ணா! ''
பயப்படாதே...... என்று!

அப்பா விரித்த கரத்தோடு வரவேற்கிறார்
ஒரு புறம் யானைகள்
ஒரு புறம் பூந்தோரணங்கள்
ஒரு புறம் முரசும் சங்கும் முழங்க
ஒரு புறம் பூமாரி பொழிய
ஒரு புறம் வேதங்கள் ஓத...
இவள் கன்னம் சிவந்தது...
இத்தனை பேர் முன்னிலையில் நான்
இவன் கரம் பற்றபோகிறேன்...

மெல்ல முன்னோக்கி அவனுடன்
நடக்க இயல அரசவை கூட்டத்தில்
சிக்கி அவன் கை
அவள் கையை விட்டு....
சிரிப்பு மெதுவாய் குறைய
இடித்து தள்ளி அவனுடன் நடக்க எண்ண
அவன் முகச்சாயல் பார்க்கிறேன் ...
முதன்முறை இவளை பார்த்த
அதே வியப்பு!!!
சுற்றி நிற்கும் மக்களும் அவர்களின் நிறங்களும்
சத்தங்களும் அவனுக்கு பெரும் வியப்பு...
மறந்தே போனான் அவளை...
சட்டென எல்லாம் அமைதியுற
காற்றை கிழித்து ஒரு குரல்...
லோம்பதரின் குரல்...

'' பெரும் பாக்கியவான்கள் நாம்...
இப்படி ஒரு யோகி நாம் காண நேர
எத்தனை தவம் செய்திருக்கிறது
நம் பூமி'' கண் கலங்க என் தந்தை...
'' இவர் கால் பட்டதும் மேகம் கருக்கிறதே...
இவர் இனி இந்நாட்டு மன்னர்!!!
'' என் மகளை மணம் செய்து இந்நாட்டை
வளமுற வழிநடத்தி செல்வார்''...
பூரித்தேன்!!!
இறுமாந்தேன்!!!
''என் தந்தை என்னை என் காதலனுடன்
என்னை துச்சமாய் மதித்த இந்த நாட்டின் முன்
கரம்பற்றி கொடுக்க போகிறார்''
நான் ஆசைநாயகியின்
காதல் பிறப்பு மட்டுமில்லை
இந்நாட்டு ராணி....
மனம் துள்ளியது...

முதல் மழைத்துளி என் மேல் பட
எனக்கு பிடித்த மண்வாசம்...
ஆரவார இரைச்சல்...
என்ன சுகம் இந்த நொடி...
என் தந்தையின் குரல் மல்க
அழைக்கிறார் என்னை...
" வா! என் அருமை மகளே! "
இத்தனை பேர் மத்தியில் கம்பீரமாய்...
மழை இப்பொழுது அழகாய் தூற
பூமித்தாய் ஆவலாய் குடிக்கிறாள்
தாகம் தீர....
நெஞ்சு நிமிர, கண் பளபளக்க
கன்னம் எரிய நான்...
வெட்கி நடக்கிறேன்
கூட்டத்தை ஒதுக்கியபடி...
மழை வலுக்கிறது..
நடக்கிறேன் கால்கள் சேற்றில் புதைய...

தலை வெட்கிகுனிந்து மெதுமெதுவாய்
அவன் அருகில் போக...
மழை இன்னும் வலுத்து...
அதையும் தாண்டி ஆரவாரம்...
கரகோஷம்...
முரசும் இணைந்து...
கண் நிமிர்ந்து பார்க்கிறேன் நாணசிரிப்புடன்...
மேடையில்
அவன் கை பற்றி சாந்தா....
மழை இப்போது வெகுவாய்...
என் தந்தை முகத்தில் பெருமிதம்
என் தாயோ தோற்றவளாய்
என் சகோதரி பரிசுபுதையல் வென்றது போல்
என் ரிஷ்யஸ்ருங்கன்
இன்னும் அதே குழந்தையின் வியப்புடன்....

அடைமழை...
நொடிநேரத்தில் நின்ற இடம் வெள்ளக்காடாய்...
அது வரை ஆர்ப்பரித்த கூட்டம்
அங்குமிங்குமாய் ஓட...
வேரறுந்து நான்...
ஜனத்திரளில் மறைந்து போனேனே...
இடித்து தள்ள
மறைகிறேன் கால்களின் நடுவே...
முதல் மிதி அடிவயிற்றில்
அவன் என்னை புணர்கிறான்...
சேற்றில் புதைகிறேன்
ஓடும் கால்களின் தெருவாய் நான் மாற...
வலிகளின் தாக்கம்...

மின்னல் வெட்டுவது கண்ணில் பட
நினைவில் அவன் என்
மார்பு பற்றி இதழ் பதித்தது...
எங்கோ இடி இடிக்க
அவன் வெப்பமுனகல்
என் காதருகே தீனமாய்...
யாரோ மிதித்ததில் என்னுளே ஏதோ நொறுங்க
முதல் முதல் என் பெண்மை அவன் எடுத்த நொடி
மெதுமெதுவாய் அடங்கும்
என் உயிர் வலியில்...
கடைசியில் நினைவிருப்பது
என்னுள் நுழைந்து என்னுள் கலந்து
என்னுள் கரைந்த காமவேதனையில்
அவன் சொல்லியது...
" நீ பிரிந்தால், என் அன்பே! நான் இறப்பேன்..."

இப்போதும் வருகிறது
ஒரு சின்ன சிரிப்பு
கடைசியில் என் தோழி மட்டுமே என்னோடு!
மறித்து தான் போனேன்
மண்வாசத்துடன் என் வாசமும் கலந்து...
நான்
வைஷாலி!!!

Wednesday, November 11, 2009

காதலிக்கிறேன்....

உச்சகட்ட இன்பத்தில்
திளைத்து எழுந்த நேரம்
உணரவில்லை...
வித்து சுமக்கும் என் கருவறை என்று...
வரவிருந்த நாட்களின்
காலையில் எழும்போதே
தலை சுற்றி பசி இல்லை....
தட்டாமாலை வார்த்தைக்கு
முழுதான அர்த்தம் உணர்வேன்...
காதலிக்கிறேன்...

உடலும் மனமும் சோர்ந்து
என்னுள் இன்னொரு உயிர்...
அழகான என் ஒட்டுண்ணி...
தினம் தினம் என் ரத்தம்
உறிஞ்சி சதை தின்று
என்னுள் ஆழமாய் வேர்கள் புதைந்து
வெகு வேகமாய் வளரும்
என் விருட்சம்...
காதலிக்கிறேன்...

இதுவரை அறியாத விஷயம்
ஒரே மாதத்தில் இதயம் துடிக்கும் என்று
மூன்று மாதத்துக்குள் கை கால் வளர்ந்து
மரபாச்சி போல ஒரு விரல் நீள குழந்தை...
வீங்கி நின்ற வயிறு தொடும் வேலை
என் மகவும் உணர்ந்து
செல்லமாய் இடிப்பான்....
காதலிக்கிறேன்...

யாரும் இல்லாது தனிமையில்
நடக்கும் போதும் என் கூட்டுக்குள் நீ
என் துணையாய்...
என் சிரிப்புடன் அழுகையுடன்
என் பசியுடன் உறக்கத்துடன்
எல்லாவற்றிலும் என்னோடு
என்னுள்ளே நானே நெய்த
என் கூட்டு பூழுவாய்...
காதலிக்கிறேன்...

ஒட்டி இருந்த வயிறு
மெல்ல மெல்ல நான் இருக்கிறேன் என்று எட்டி பார்க்க...
என் கால் கட்டைவிரல் பார்த்து
நாட்கள் பல...
ஆசையாய் தான் இருக்கிறது
தலையணை வயிற்றில் அழுத்த
ஒரு முறையாவது தூங்க....
இடுப்பு வளைந்து....
வயிறு தள்ளி... நடையும் மாறி...
ஆடி ஆடி நடக்கிறேன்....
காதலிக்கிறேன்...

உயிர் பிடுங்கும் வலி...
உடல் பிளக்கும் பிரளயம்...
எல்லா உணர்வும் மறுத்து
வேதனை மட்டுமே மூச்சாய்....
உதிரம் கொட்ட
தசை விரியும் துளி துளியாய்...
கர்பக்கூடு திறந்து
வெளிவருவாய்
உன் கருவறை வாசம் விட்டு...
மெதுவாய் உள்ளிழுக்கிறேன்
வெகு நாள் கழித்து
நீண்ட ஒரு மூச்சு...
வியர்வை மழையில் நனைந்து
உயிர் போய் வந்தது வாஸ்தவம் தான்...
ஆனாலும்
காதலிக்கிறேன்...

தாய்மை புனிதம்....
துரோகங்கள் வெறுப்புகள்
கண்ணீர்கள் சோகங்கள்
குழப்பங்கள் கோபங்கள்
என கருப்பு வலிகள்
சாட்டையை சுழற்றினும்....
இன்னும் கறுக்காத என் பிரயாணம்
சொல்லி புரியவைக்க இயலாது...
வன்மமும் புணர்ச்சியும் தாண்டி
தொட இயலா என் மோன நிலையை...
என்றும் காதலிக்கிறேன்...

Sunday, November 8, 2009

சங்கிலி விதைகள்!!!

சபிக்கிறேன்...
என் உதடுகளை....
வெந்து கருகி இதழ்கள்
ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் இக்கணத்தை...
சபிக்கிறேன்...
என் வார்த்தைகளை...
மந்திரமாய் சொல்ல எண்ணி
மனப்பாடம் செய்தவை நெருப்பில் கசிந்து
தரையில் ஒழுகும் இக்கணத்தை...
சபிக்கிறேன்...
என் இதயத்தை...
உன் சிரிப்பின் விரல்கள்
பிடியில் சிக்கி ஓடாமல்
ஓய்ந்து நின்று விட்ட இக்கணத்தை...
யோசனை கரும்பலகையில்
இருந்த எழுத்துகளை
உன் எச்சில் கொண்டு
அழுந்த துடைத்து விட்டாய்...
கட்டாந்தரையில் மீண்டும் தோற்று
சபிக்கிறேன் என்னையே ஒரு கோடி முறை...
ஆசை செடிகளை மனதின் ஆழத்தில் ஊன்றி நட்டு
நாளையாவது முளைக்கும்
என்று நொடிக்கொரு முறை தரை
பார்த்து நிற்கிறேன்...
மறந்து தான் போனேன்
பாறையாய் இறுகி கனவுகள் உறைந்த நிலம்
உன் மனம் என்று...
ஆலவிருட்சம் முளையிட காணாமல்
மறைந்தே போகும் விதை..
உனக்கு கொடுத்தே காணாமல் கரையும் என் காதலும்...
தெரிந்தே பறிக்கிறேன்
உன் நினைவு களைகளை...
தெரிந்தே புதைக்கிறேன்...
என்னையும் அதனுடன்...
முற்றுபுள்ளி வைத்த பின்னும்
தாண்டி போய்க்கொண்டே இருக்கும்
உன் வார்த்தைகள்..
இன்னும் கிடக்கிறேன்
அதே கட்டாந்தரையில்...
ஆசையாய் நட்ட செடிக்கு
பதில் வளர்ந்து நிற்பதோ
நீர் கேட்காத
என் சங்கிலி தோட்டம்...
வளர வளர இன்னும் என்னை
இறுக்கி தரையில்
ஆழ பதித்து...
சிறகுகள் வளர்ந்தும்
பறக்க இயலாது
சங்கிலி குவியலில்
மெல்ல புதைந்து...
நான்....

Saturday, November 7, 2009

உன்னுள் ....

மூடுபனி இருட்டு கண்களை காக்க...
மெல்லிய நிழல்கள் ஒன்றோடு
ஒன்று கலக்கும் இடத்தில்
நானும் நீயும்...
என்னை எடுத்து உன்னுள் கரைத்துவிட்டாய்!!!
சுற்றி சுற்றி நானில்லாமல் மறைந்தேன்
நீ எனக்காக சுவாசிக்க, புசிக்க, சுகிக்க,
நான் கவலை ஏதும் இல்லாது
உன்னுள் மிதக்கிறேன் இதோ...
உனக்காக எல்லாம் கொடுத்து
நானே இல்லாமல் ஆனேனே...
இந்த நான் இல்லாத வெளியில்
உன்னுள் இருந்தும் உன்னை தேடிக்கொண்டே நான்...
உன்னுள் கரைந்தும் நீ இல்லை என்னுடன்
இதயம் ஏங்க
உன் ஸ்பரிச துகள்கள்
என் மேல் படிய
காத்து நிற்கிறேன்...
விம்மி வரும் பாடல்
சோகம் ஏந்தி என்னுளிருந்து!
என் ஓசை உனை உருக்க
நீயும் கரைந்தாய்....
என் அன்பே...
இதோ நீயும் கரைந்து நானும் கரைந்து...
இருவரும் இல்லாது மறைந்தோம்..
எங்கே என தெரியாத அண்டவெளியில்
எல்லாவுமாக கலந்து....
எங்கும் இருந்தும் இங்கு இலாத நிதர்சனம்
இந்த இருட்டு ஏகாந்தத்தில்
உன் முத்த தழுவல் வேண்டி
காத்து நிற்கும்
என் பாடல் மட்டும்....

Monday, November 2, 2009

மரணஓலம்...

என் குற்றுயிர் பிரியும் முன்
உன்னிடம் சில கேள்விகள்...
உனக்கு சில பதில்களும்...
புழுதி படிந்தும், துருவேறியும்
கனத்த மௌனத்தின் சாலையில்.
சிரிக்கும் முகமூடி நிதம் அணியும்
குரூபி நான்...
என் சிரிப்பின் சங்கீதம் எல்லோரும் ரசிக்க
என் காதில் மட்டும்
என் மரணஓலம் இரைச்சலாய்...
இருட்டில் உன்னை தேடுகிறேன்
கேள்வியோடு...
எதனால் உன் என் வார்த்தைகள்
குருதி வழிய வலியோடு
மிச்சமீதி காதலும் வற்றிபோகும்படி
சிறைப்பட்டு...
தனிமை ஜீவனை உறிஞ்சியபடி
எட்டி நின்று பார்க்க...
சதை பிடுங்கி திங்கும்
நம் சச்சரவு வல்லூறுகள்...
உன் கேள்விகளுக்கு பதில் இருந்தும்
வலியின் உச்சத்தில்
விடைகள் மறுத்து...
அன்பு மட்டுமே தேடி
உனக்காக சோகமூட்டை சுமந்த அகதி நான்
எப்படி மறந்தாய் இதை...
சிரிப்பும் அணைப்பும் நிறைந்த
நினைவுகள் பழுப்பேறி போய்...
உன் குற்றச்சாட்டு குரல் கேட்கையில்
என் இத்தனை நாள் வாழ்வும்
ஆயிரம் பேர் பார்க்க
கழு ஏறுவதை உணர்கிறேன்...
என் அன்பாய் இருந்தவனே
உள்ளுக்குள் கொப்பளிக்கும் என் கோபத்தின்
உச்சத்தில் இதோ அறுக்கிறேன்
இறக்கும் கணத்திலும்
என் உதடுகளை....
உயிர் பிரிந்தாலும் என் முகம்
நீ பார்த்து மனம் கனத்து
உன் கோப வெறுப்புகள் மறந்து
முத்தமிட்டு வழியனுப்ப நினைத்தால்
உதடுகள் அற்ற என் கோர முகம் வரவேற்கும்
என் வலி விகாரம் காட்டி...

Sunday, November 1, 2009

தீ மூட்டிவிடு...




வறண்ட வெற்று பாலை நிலம்
மெத்தென நெருப்பு
கொழுந்து விட்டு எரிய
ஒற்றையாய் நான்...
என்னை கொளுத்த உனக்கு
தீப்பந்தம் வேண்டாம்!
எரிமலை குழம்பு வேண்டாம்!
கைப்பிடி கானல் நீரும்
பசும்புல்லின் நுனியும் போதும்...

விடிந்தும்
இன்னும் கொழுந்துவிடுவேன்...
என் வேர்கள் சூறாவளியில் நிலை குலைந்து...
உயிர் போராட்டத்தில் நான்
படபடத்து...
மரணத்தை நோக்கி...
சட்டென மரித்தால் நன்றே...
ஒரு மழைத்துளி பட்டால் மரிப்பேனோ?
என் தவம் கண்டு
தரை நோக்கி வந்த மழையும்
நான் பார்க்கையில்
மீண்டும் விண்ணோக்கி...

பார்...
உன் முத்த முட்கள் பட்டு
கிழிந்து தொங்கும் என் கன்னத்தை...
கேள்...
உன் நிசப்த வெடி இரைச்சலுக்கு
என் இதயம் துடிக்கும் தாளத்தை...
ரசி...
என் வான நட்சத்திரங்கள்
உன் கண் பார்த்து கடைசியாய்
கண்சிமிட்டி
கல்லறையில் இறக்கும் நொடிகளை...

ஒரு வேளை
என் கனவுகளை தின்று
என் கண்ணீரை குடித்தால்
சத்தமின்றி மடிந்து இறப்பேனோ...
தீ சிறகுகள் மெது மெதுவாய் திசுக்களை
சாம்பலாக்கி மெல்ல
காற்றுடன் கை கோர்த்துவிட்டு
நகைக்கும்...
மொத்தம் எரிந்தும்
ஓரத்தில் ஒரு நப்பாசை...
தீ மூட்ட வந்த உன் கை
தீ அணைக்க வருமென்று...

நெருப்பு என்னை கரைக்கும் வரை
உன் அணைப்பை தேடி கொண்டே...
நீ இல்லை
இன்னும் சோகத்தின் பிடியில்
என் முடிகற்றைகள்
கருப்பு தீக்கனலாய்
எரிந்து கொண்டு...
இது தான் என் கடைசி இரவென்றால்..
முற்றுபுள்ளி வைக்கும் முன்
நான் பாடம் எடுக்கிறேன்
என் அன்பே...
உனக்கு...
ஆசை உடன்
எப்படி கொலை செய்வது என்று...