Wednesday, December 15, 2010

ஏக்கங்களின் கூவல்!



தேடல்கள் நைந்து, நினைவுகள் சிடுக்கு கோலம் இடும் இரவுகளில்
விளக்கங்களும் நலிந்து போக தான் செய்கிறது!
தொடக்கங்களையும் முடிவுகளையும் காணா உயிர்கள் மலிந்து
வியாக்கியானங்களின் சுய இன்பதில் தொலைந்து கொண்டிருந்தது!

சிகப்பு ஆசைகளில் தொலைந்து நிற்கும் நான்
சமதளம் இருக்கும் மேகங்களில் இறக்கை விரிக்க யத்தனிக்க
ஏனோ கலைந்து செல்லும் கனவு குதிரைகளின்
குளம்பின் புழுதியாய் மறைகிறது வாழ்வு!

வளர்ந்து சென்ற கால்தடங்களில் மிச்சமுள்ள ஈரத்தை
தேடியபடி மீண்டும் காலசுவடுகளில் தவழ,
இம்முறை தோல் தேய்ந்து சிதறும் ரத்தம்
காய்ந்த இடங்களில் கண்ணீராய் உருள்கிறது!

தோன்றலில் இருந்த புதுமை
கூடிநின்ற குடும்பதில் குழுமிய வெப்பம்
புணர்தலின் விதிமுறையில் புரிந்த காதல்
எல்லாம் கைப்பாகி உதிர்கிறது!

இறத்தலும் மீண்டும் உயிர்த்தலின் ஆதாரம்
என்பதால் மறைவதிலும் பின் எழுவதிலும்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
ஏக்கங்கள்!