Friday, December 19, 2008

தனிமை

காலை கடிகாரம் அடிக்கும் முன்பே
கண்விழிப்பு...
தூங்கியும் தூங்காத நினைவு!
படுக்கையில் கிடக்கும் நேரம்
வெறுமையின் விரல்களின் கிடுக்கிபிடி...
மூச்சு விடவே சிரமத்துடன் தொடங்கும்
என்னுடைய இன்று...

நேற்றுக்கும் என்றைக்கும்
பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை...
என் இன்றைக்கும் நாளைக்கும்
ஒரு வித்யாசம் இல்லை...
இயந்தரமாய் மாறிய கால்கள்
நேராக கூட்டி செல்லும் தயாராக...

உடை மாறி கடவுள் முன்
கண்மூடி நிற்கும் நேரம்
என்னை அறியாமல் இமை நனைக்கும் கண்ணீர்...
என்ன வேண்டி என் பிரார்த்தனை?
அதுவே மறந்து போய் நான்...
மனது லயித்து செய்யும் செயல்கள்
மறந்து நாட்கள் பல பல!!!

நெஞ்சின் உள்ளே ஒரு பெரிய பூட்டு
இதயம் அதனுள் மறுத்து துருவேறி போய்!!!
மிதமிஞ்சி இயங்கும் மனித அலைகளின்
மத்தியில் பாலைவன தனிமை...
எதற்காக நடக்கிறேன்?
என்ன செய்கிறேன்?
என்ன தேடுகிறேன்?
என்ற கேள்விகளின் குமுறல்கள்
அடங்கி நான்...

இந்த தனிமையின் பதில்
எப்போது கிடைக்கும்
தாயின் மடியில் கண்மூடவும்
என் மகனின் தலைமுடி கோதி உச்சி முகரவும்
கொதியாய் கொதிக்கும் மனது...
நாட்களின் இரைச்சல்களில்
ஒவ்வொரு மணித்துளியும் அடித்து கொண்டு ஓட
என்றாவது கரை ஒதுங்குவேன்
என்ற சிறிய நப்பாசையில்
இன்னும் மிதந்து கொண்டு
என் நாட்கள்...