Monday, December 27, 2010

காணாமல் கரைந்தவர்களின் குளம் !


இருட்டு குளத்தில் அமர்ந்து பார்க்கையில்
வெண்மையாய் தகதகக்கும் பிம்பங்கள்
அனைத்திலும் தொலைந்த முகங்களின் திரட்டு...
முகங்களை தொலைத்தவர்கள்
வசிக்கும் வீதியின் முடிவில் தான் என் வீடும்!

இப்போதும் பிடிக்கிறதா என்ற கேள்வி விதைகள் புதைந்து
சந்தேக வாசனை மலர்கள் பூத்து நிற்கிறது!
முன்பு பிடித்தவனின் முகம் பிய்ந்து
இதே குளத்தில் கரைந்துவிட்டதாக சொல்கிறது
நீர் திவலைகள்!

கொதித்து கொப்பளிக்கும் கோப சகதியும்,
தேடியது கிடைக்காத வன்மமும்,
பேசுவது போய் சேராத நிழற்திரை வானமும்,
இழைந்து செய்த கசப்பு உலகங்களின்
முடி சூடா அதிபதிகள் முங்கிய குளம் அது!

நேற்று பிடித்த அவன் முகம்
குளத்தில் புதைந்து நீரின் மேற்பரப்பில்
வெள்ளி கம்பியில் காற்றாடியாய் மிதக்க
அவனும் சொல்கிறான் குளத்தின் அக்கரையில்
என் முகம் மிதப்பதாக!

Wednesday, December 15, 2010

ஏக்கங்களின் கூவல்!



தேடல்கள் நைந்து, நினைவுகள் சிடுக்கு கோலம் இடும் இரவுகளில்
விளக்கங்களும் நலிந்து போக தான் செய்கிறது!
தொடக்கங்களையும் முடிவுகளையும் காணா உயிர்கள் மலிந்து
வியாக்கியானங்களின் சுய இன்பதில் தொலைந்து கொண்டிருந்தது!

சிகப்பு ஆசைகளில் தொலைந்து நிற்கும் நான்
சமதளம் இருக்கும் மேகங்களில் இறக்கை விரிக்க யத்தனிக்க
ஏனோ கலைந்து செல்லும் கனவு குதிரைகளின்
குளம்பின் புழுதியாய் மறைகிறது வாழ்வு!

வளர்ந்து சென்ற கால்தடங்களில் மிச்சமுள்ள ஈரத்தை
தேடியபடி மீண்டும் காலசுவடுகளில் தவழ,
இம்முறை தோல் தேய்ந்து சிதறும் ரத்தம்
காய்ந்த இடங்களில் கண்ணீராய் உருள்கிறது!

தோன்றலில் இருந்த புதுமை
கூடிநின்ற குடும்பதில் குழுமிய வெப்பம்
புணர்தலின் விதிமுறையில் புரிந்த காதல்
எல்லாம் கைப்பாகி உதிர்கிறது!

இறத்தலும் மீண்டும் உயிர்த்தலின் ஆதாரம்
என்பதால் மறைவதிலும் பின் எழுவதிலும்
நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது
ஏக்கங்கள்!