Thursday, July 19, 2012

பேராசையில் அழுகும் அன்பு!!!


நான் இல்லாத நீயும்
அவள் இல்லாத நீயும்
மையத்தின் எதிர் மூலையில்!!!
அடித்து செல்லும் வாழ்க்கையின் ஊழியிலும்
நீங்கள் என்பது இணைந்தும்
நான் என்பது தனித்துமே நகர்கிறது!!!

பிடித்தம் இல்லை
புரிதல் இல்லை
இணைதல் இல்லை
பேச்சு இல்லை
சுகிக்கவில்லை
என்று அடுக்கியபடியே
பரிதாபமாக வலம் வருகிறது
கூர்நகங்களை கொண்ட
பூனையை போல உன் ஆண்மை!

உன் தேவைகள் அத்தனையும்
தடவி கொடுப்பினும்
நான் இல்லாத நீயை
ஒத்துக்கொள்ளும் நீ
அவள் இல்லாத நீயை
தவிர்க்க இயலாது
உதடு பிதுக்குகிறாய்!!!

முதுகின் எலும்பை ஒவ்வொன்றாக கழட்டி
தருகிறேன் ஒவ்வொரு முறையும்
உன் கனிவான பார்வைக்கும்
அன்பான சிரிப்புக்கும்!!
நல்லவன் என்பதில்
சிறிதளவும் சந்தேகமில்லை!
பிரியத்தின் பேராசையில் அழுகும் உன் அன்பு!!

மீண்டும் ஒரு முறை பிரித்து துடைக்கிறேன்
என் சிறகுகளை!!!
எனக்கான வானம்
எனக்கான மேகம்
எனக்கான சிகப்பு பூமரமொன்றில்
சின்னஞ்சிறு கூடு!
பூனைகள் இல்லாத வனமொன்றை நோக்கி
இருக்கும் என் இனிவரும் பயணம்!!!