Wednesday, January 5, 2011

இதன் பெயர் பெண்ணியமா ?



சமீபத்தில் கேட்ட dialogue: அவன் குடிக்காரனா இருந்தா, அதுக்காக அவ கண்டவன் கூட போகணுமா ? (censored version)

கதையின் பின்புலம் : நன்கு படித்த வேலையில் உள்ள இளைஞன், நன்கு படித்து வேலையில் இருந்த பெண்ணை திருமணம் செய்து அழகான பிள்ளையும் பெற்று, வாழ்க்கை அழகாக போய் கொண்டிருக்கும் சமயம், நான்கைந்து வருடமாக கடும் குடிப்பழக்கத்திற்கு கணவன் ஆளாக, பெண்ணிற்கு இன்னொரு ஆணோடு தொடர்பு ஏற்பட்டதோ அல்லது ஏற்பட்டதாக எண்ணம் வந்ததோ, 5 வயது குழந்தையை பற்றி கருதாது, ஆண் தற்கொலை செய்து கொண்டான்.

ஆண் பக்க நியதி:
1. ஊரில் குடிப்பழக்கம் இல்லாத ஆண்கள் வெகு குறைவு, அதற்காக பெண் தன் எல்லையை தாண்ட வேண்டுமா?
2. திருமணம் என்ற பந்தத்தில் உடன்பட்ட பெண்ணிற்கு எப்படி கணவன் அல்லாதவனை பற்றி எண்ணத்தோன்றும். அப்படி தோன்றினால், அவள் பரத்தையை போன்ற சிந்தை உள்ளவள் தானே?
3. அந்த காலத்தில் எல்லாம் அடித்தாலும், உதைத்தாலும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று அல்லவா இருந்தார்கள். ஏன் இப்போது இந்த மாற்றம்?
4. குடும்ப நலத்திலும், குடும்பத்தின் பெயரை காக்கும் பெரும் பொறுப்பில் இருக்கும் பெண் கணவன் குடித்தாலும், அடித்தாலும், ஊதாரியாக இருந்தாலும் எப்படி அவனை விட்டு பிரியலாம்?

பெண் பக்க நியதியை எந்த இடத்தில் நின்று பேசுவது என்று புரியாது நிற்கிறேன். ஏனென்றால் வாழ்க்கை கருப்பு வெள்ளை அல்லவே. இடையே உள்ள grey shades தானே எல்லா இடங்களிலும் விரவி உள்ளது. இதில் எந்த இடத்தில் நின்றாலும் அந்த இடத்திற்கு ஒரு விளக்கம் இருக்கிறது. வாழ்க்கையில் சரி தவறு என்று இல்லை. என் பார்வையில் சரி என்பது மற்றொருவர் பார்வையில் தவறாக தெரியலாம்.

அந்த பெண்ணிற்காக வாதாடவில்லை என்றாலும் மருத்துவராக என் பார்வை:

எந்த ஒரு relationship தங்கு தடையின்றி செல்ல நல்ல கருத்து, பேச்சு பரிமாற்றம் தேவை என்று சொல்கிறார்கள். திருமணத்திற்கு முன்னும் பின்னும் கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை வரலாம். ஆனால் கட்டாயம் வரும் என்பதற்கு இல்லை. அப்படி ஒரு வேலை கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டாலும், அல்லது திருமணம் செய்த பின் இருவரின் ரசிப்பு தன்மை குறைந்து போனாலும், அதற்கு யாரை குறை சொல்லமுடியும்.

திருமணம் செய்து கொண்டதால் மட்டும், இருவருக்கும் கட்டாயம் ஒருவரை ஒருவர் பிடித்து தான் ஆக வேண்டுமா? பிடிக்காது போனாலும் வேறு வழியில்லாது, வாழ்ந்து வந்த நிலை மாறி, பெண்கள் படிப்பாலும் வேலையாலும் தனித்து நிற்கவும், பல்வேறு தரப்பட்டவர்களை சந்திக்கும்படி நேரும்போது, மனநிலை மாறி போக நிறைய platform உண்டாகிறது நிஜம் தான். Change is the only constant thing அப்படின்னு Heraclitus 535B.C - 475B.Cலயே சொல்லிட்டு போயிட்டார்.

குடிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் உடலை மட்டும் அன்றி மனத்தையும் சோர்வடைய செய்யும். தேவையில்லாத கோபம், guilty conscience, அர்த்தமற்ற சந்தேகங்கள், பிசாத்து பெறாத விஷயங்களுக்கு சண்டை, தன் நிலையை நியாயப்படுத்த மற்றவர்கள் மீது குறை கூறுவது, உடலாலோ மனதாலோ தாம்பத்தித்தில் ஈடுப்பட முடியாது போவது, குடும்பத்தை நடத்த போதிய பணம் தராது போவது, சமூகத்திலும் குடும்பவட்டத்திலும் கீழ்த்தரமாக நடந்து கொள்வது இப்படி அடுக்கிக்கொண்டே போகும் போது பெண்ணின் மனதில் கணவன் என்ற பந்தத்தின் மீது லேசான விரிசல் ஏற்படலாம். இந்த விரிசல் நாளடைவில் பெரிதாகலாம். ஏதோ ஒரு விதத்தில் தான் ஏமாற்றப்படுவது போல தோன்றும் சமயம், தன்னை சந்தோஷப்படும் நட்பு கிடைக்க நேர்ந்தால், அந்த சந்தோஷத்தை தக்கவைக்க எத்தனை தூரம் ஒரு பெண் பயணப்படுவாள் என்பது தான் grey area. அந்த சந்தோஷத்தின் அளவும் முடிவும் grey area தான்.

அடித்தாலும், மிதித்தாலும், சக மனுஷியாக மதிக்காது நடத்தினாலும் பொறுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்ற கட்டாய சூழல் மாறிய நிலையில், ஆண் பெண்ணை பற்றி வைத்திருக்கும் rules மாறவேண்டுமா இல்லை பெண்ணின் மனவோட்டம் தவறாக மாறிவிட்டதா?

முன்பு படிக்காது, அடுப்படி, குழந்தை, கணவன் என்ற வட்டத்தில் மட்டும் இருக்கவேண்டும் பெண்கள் என்ற நிலைப்பாடு மாறி, படித்த வேலைக்கு செல்லும் பெண் வேண்டும் என்று கேட்கும் போதே இந்த மாற்றமும் வரலாம் என்பதை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

எது சரி??? எது தவறு???