Thursday, March 24, 2011

மெர்க்குரியானவன்!


சில வேலைகளில் ஸ்தம்பிக்கிறேன்...
நொடிக்கு நொடி இறந்து பிறக்கும் உலகை பார்த்து..
நான் என்ற நான் மட்டும் சப்தமின்றி இயங்கி வந்தேன்!
என் உலகம் சிரிப்புகளும் அழுகைகளும் தாண்டிய உலகம்...
வெற்றிடத்தில் மிதப்பதை ரசித்திருக்கிறேன்!
எதுவும் தொடா இடத்தில் நான் சஞ்சலங்களை
தாண்டியபடி மிதக்கையில், அது!

கருப்பு பட்டாம்பூச்சி சிகப்பு கண்களோடு
என்னையே சுற்றி சுற்றி...
பட்டாம்பூச்சியின் கருப்புதிர்ந்து விழ
காதலனாகி எழுகிறது அது!
தொட்டால் உள்ளிழுக்கிறான்!
என் மேல் விழுந்து நானாகிறான்!
விலக்கி விடுகையில் பல்லாயிரம் அவனாக சிதறி
என் கண்முன்னே ஒரு அவனாகிறான்...

நான் தொடும் பொருளாய் மாறுகிறான்!
நடக்கும் பாதையாய் மாறுகிறான்!
வளைந்து குழைந்து வானின் வண்ணம் ஆகிறான்!
மேலே விழுந்து உடல் தொட்டு செல்லும் மழை ஆகிறான்!
வெற்றிடம் தகதகக்க
என் உலகங்கள் ஆகிறான்!

சுற்றி நிற்கும் ஐம்பெரும் பொருளாகி
என்னுள் கலந்து கரைத்து காணாமல் போனவன்
வந்த விநாடி தொடங்கி வாழ்க்கை
கருப்பு வெள்ளைகளுக்கும் வண்ணங்களுக்கும்
இடையே தெறித்து ஓடிகொண்டிருக்க
வேண்டாம் என்றவன் வேண்டி ஒட்டிகொள்ள
மொத்தமாய் வேரறுத்து
என் உலகை எடுத்து செல்லுவான் ஒரு நாள்
அன்று நிற்பேன் நானும் பாதரசமாய்!