Saturday, January 30, 2010

மந்தகாச உடுப்புகள்!!!



இரவுகளில் ஒரு கந்தர்வன் வருகிறான்..
கறுப்பு குதிரையில் சாட்டை சுழட்டியபடி!
தூங்கியும் தூங்காத வேளைகளில் வரும்
அவன் வாசம் பிடிக்கிறது...
ரத்தமும் தோல்வியும் திமிரும் வெறியும்
கலந்த ஒரு இருட்டு வாசம்...

அவன் பேச்சு மிக மெதுவாய் கேட்டாலும்
காதுக்குள் அது பிரளயமாய்...
நான் எச்சில் ஒழுக தூங்கும் நிமிடங்களை
என் சுவற்றின் விட்டத்தில் இருந்து பார்க்கிறான்...
அவனின் விசும்பல் மிக நுட்பமாய்...
என்னை உறக்கத்தில் புரட்டி போடும்!

விழித்துப் பார்க்கிறேன்
மூக்குகள் உரச, அவன் அந்தரத்தில் மிதக்கிறான்..
கண்முன் விரிந்த கனத்த கடலாய்
கனவுகள் அற்ற கனவில் எனக்காய் உயிர்த்தெழுகிறான்...
கைப்பற்றி அழைத்துப் போகும் உன் தேசத்தில்
சிரிப்புகளும் சோகங்களும் வறண்டுவிட்டது என்கிறான்!

என் கறுப்பு கந்தர்வனே!
இத்தனை நெருக்கத்தில் சுவாசம்
தெறிக்க நிற்கும் உன்னை கைநீட்டி அணைக்கத் தேட...
கணக்கெடுக்க முடியா எத்தனை தொலைவில் அவன்!
கறுத்த அவனில் இருந்து முளைக்கும் ஆயிரம் கரங்களும்
என் பாதையாய் என் வானமாய் விரியும்!

உன்மத்த நிதர்சனத்தை
என் படுக்கையில் கரைத்துக்கொண்டு இருக்கும் எனக்கு
இன்னமும் தெரியாது அவன் யார் எனக்கென்று..
சிரிப்புகளின் ஊடே குரல் குழைந்து
சொல்கிறான்..
இருக்கும் தோலான உன் உடலை கழட்டிவிட்டு வா...
மிதக்கும் உன் ஒன்றுமில்லாதவைகளுக்கு
கொடுக்கிறேன் மந்தகாசத்தை...
உடுத்திக்கொண்டு பார் புரியும்
நான் உன் தோழி...
நீ என் தோழன்...

Monday, January 25, 2010

ப்ரபஞ்சத்தின் தூரிகை...



வெள்ளை நிற குடைப்பிடித்து
வெளிர் சிகப்பு உடை அணிந்து
கை கொள்ளா வண்ண கரைசலை
விரிந்த என் வானசுவற்றில் தெளித்து
அண்டம் முழுக்க உதிரும்
கேள்வி குறிகளில் கால் பதித்து
கருப்பு காலணிகள் அழகாய் பூட்டி
ஏறி செல்வேன் என் வானவில்லினுள்...

ஒளிரும் நட்சத்திரங்களின் மிளிர்ப்பெடுத்து
வழியும் என் அமைதியில் கலந்து
நோக்கும் கண்களின் நிறம்பிரித்து
ஒன்றாய் கொட்டி கலப்பேன்...
முயல்குட்டியின் வாஞ்சையும்
என் மகனின் வாசமும்
உலகின் தாய்மையும் கையுடுத்து
இடுவேன் என் கரைசலுக்குள்...

பசும்புல் ஈரம் கொண்டு
இளம்நீல மேகம் பிழிந்து
அன்பின் சிகப்பெடுத்து
ஏத்துவேன் வண்ணங்களை...
கரைத்தெடுத்த சிகப்புகளும் பச்சைகளும்
அரைத்தெடுத்த என் தங்க நிலவினில்
மெதுமெதுவாய் உருக
மெல்ல மண்டியிட்டு கேட்கிறேன்
என் நிறங்களின் மொழியினை...

சந்தேககோபத்தின் குரல்
பறிக்கும் என் சிரிப்பினை!
யார் அழகென்ற விவாதத்தில்
சலசலக்கும் வண்ணக்குவளை...
புருவம் சுளித்து முறைத்தேன்
உறக்கம் தொலைத்த கண்கொண்டு
ரத்தநாளத்தின் சுவடுகள் அதனுள் தெறிக்க...

சிகப்பிடம் கூறினேன்
நீ என் ஆசை என்று..
கருப்பிடம் கூறினேன்
நீ என் பெண்மை என்று...
பச்சையிடம் சொன்னேன்
நீ என் அழுத்தம் என்று...
நீலத்திடம் சொன்னேன்
நீ என் வெறுமை என்று...

வெண்மையின் மகவுகளாய்
அன்பின் கனவுகள் சுமந்த
நீங்கள்தான் என் மொத்தமும் என
இதழ் நனைக்க முத்தமிட்டேன்...
கைகொண்டு அணைத்து
அள்ளியெடுக்கிறேன்
என் ஆசை உலகம்
புதிதாய் புனைய...

மனம் கொண்டு வரையும்
என் அற்புதபூமியில்
பேரன்பு மென்சருமங்களை வருடும்...
சிலிர்த்தெழும் காதலை இதயம் ருசிக்கும்...
அபரிதமான சமாதானத்தில் உள்ளம் அதிரும்...
புன்னகை மட்டும் உலவும் உயிர்மூச்சாய்...

வழியும் கண்ணீர் துடைக்க
என் வண்ண பட்டாம்பூச்சிகள்
கடன் தரும் மென்சிறகுகளை...
இதயம் உடைக்கும் வார்த்தைகள் தடுக்க
என் அழகு பூக்கள்
கேடயாமாக்கும் அதன் இதழ்களை...

இந்த வெறுப்புகள் அற்ற என் செல்ல ஆகாயத்தில்
தீராத இசை புணரும் நான் வரைந்த வானவில்லை
சலிப்புகள் மறந்து எந்நேரமும்...
சூசகமாய் உரசிய சூட்சம சங்கமத்தில்
பிறக்கும் ஒவ்வொன்றும்
மாறும் என் தூரிகை விரல்களாய்...

ஒரு விரல் கொண்டு வரைந்த என் ப்ரபஞ்சம்
இத்தனை இத்தனை எழிலெனில்
என் விரல்கள் அத்தனையும் பரிசாக்குவேன்
உங்கள் அனைவருக்கும்!

Saturday, January 16, 2010

அசோக வனங்களும் ராதையும்!!!



ராதையாய் சீதையாய் எழுதி பார்க்கிறேன்
புதிய சகாப்தங்களை...
சூர்ப்பனகைகளும் மேனகைகளும்
எனக்குள் அடங்கித்தான்
யாதும் ஆகி நிற்கிறேன்;
என் பிரிவினைகளுடன்!
ஆயிரம் கரமும் காலும் நாக்கும் முளைத்து!
கடவுளா காமுகியா தேவதையா பெண்ணா...
நான் யார் இதில் உங்கள் பார்வையில்...

இதிகாசங்களின் பக்கங்கள் தொடங்கி இன்றைகள் வரை
எங்களின் வித்துக்களும் அதன் முடிச்சுகளும்...
நான் வசிக்கும் பட்டியின் தடுப்பாய்
உங்கள் சட்டங்கள்....
எது சரி எது தவறு என்று இனி
முடிவெடுப்போம்....
தராசுகளை உங்கள் கையில்
இருந்து பிடுங்கி...
போதும் ராமர்களுக்கும் கிருஷ்ணர்களுக்கும்
நான் காத்திருந்த நிமிடங்கள்...

அக்னிப்பரிட்சைகள் அலுப்பாய் இருக்கிறது!
காதலாய் காத்திருந்து அசதி தட்டுகிறது!
புரட்டு புராணங்களும் மார்த்தட்டும் வீர வசனங்களும்
வெட்டித்தான் போடுகிறது
எஞ்சிய தனங்களை...
மாதமொரு முறை மாறும் சமூகநெறி
மாறாமல் ஏற்றும் இதயத்தில் படிமத்தை...

பாதிநேரம் உங்கள் பல்லிடுக்குகளில்
சிக்கி என் கற்பு காரை தான் படிகிறது...
விமர்சன வரைமுறை கோடுகள்
உங்கள் நாக்குகள் தாண்டி எம் படுக்கையறைவரை!
தடித்த பேச்சுகளில் பொசுங்கி போயே விட்டது
எஞ்சி இருந்த கருணையும்...

பெண்ணெனில் இப்படி தான் இருத்தல் வேண்டும்
என பழுத்த கல்வெட்டுகளை கழுத்தில் மாட்டி,
விழிமுட்டும் ஏனைய உயிர்களுடன்
தாயாய், தாரமாய், தாசியாய் மாறி
இனி கால் பதித்து நிற்க தரைகள் அற்று
வேரருந்து மிதக்கிறேன்
என் சுயங்கள் கிழிந்து!

ஏகாந்தங்களும் மந்தகாசங்களும்
புத்தகஏடுகளில் மக்கிப்போக...
ஊழிப்பெருக்காய் கண்ணீர்
மாராப்புகளை அடித்துப்போக...
கனவுகளாய் நிஜங்களும்
நிஜங்களில் நினைவிழந்தும்
தவித்து போகிறது உயிர்பரப்பு...

நா உலர்ந்து போகிறது...
பெண்ணியங்களும் உடலரசியல்களும்
பேசி பேசி...
என் அன்பு ராமரே!
என்னை அக்னிகுண்டத்தில் ஏற்றும் உன்னகத்தே
இன்று என்ன கேள்வி?
நன்கு தெரியும் எனக்கு ...
சோரம் போனது என் உடலா என் மனமா...
இது தான் அல்லவா
பதில் எதுவாய் இருப்பின் மனம் அடங்குவாய் நீ...
இன்றைய என் பதில் சஞ்சலம் தீர்ப்பினும்
உன் நாளைகளில் புதிய கேள்வியுடன் நீ நிற்பாய்
அது சாஸ்வதம்...

கோகுலமோ அயோத்தியோ எனக்கு வேண்டாம்
அங்கீகாரம் கொடுக்கும் பெயரோ வேண்டாம்...
தனிமைகளில் வெதும்பி கற்பனையில்
என் நாட்கள் ஓட...
நான் நடக்கும் இன்றைய பாதையில்
நேற்றைகள் இருளாய் படிய
நாளைகள் முள்ளாய் அவதணிக்க
வெளிச்சம் தொலைந்த விண்மீன்கள்
மட்டுமே துணையாய்...

சிரிப்புகளின் ஊடே நிர்ச்சலனங்களற்ற
என் பாதுகாக்கப்பட்ட கடந்தக்கால வெளிகள்...
கால்கள் தாண்டி ஓடிய பட்டாம்பூச்சி வாழ்க்கையை,
யாருமற்ற அடர்தனிமையில் உதிரும் மயிர்களின் ஊடே
எண்ணித்தான் பார்க்கிறேன்!
ஒன்றுமே அற்ற சூனியத்துக்குள்
இருந்து விடுபட
அசோகவனத்தில் ஒதுங்குகிறேன்
மாளிகைக்கு மயானங்களே மேலென்று!

Wednesday, January 6, 2010

காயசண்டிகை ஆகிய மணிமேகலை...



ரத்தம் படிந்த கைகள் காஞ்சனன் உடையது....
ரத்தம் தோய்ந்த நினைவுகள் என்னுடையது....
ரத்தம் உறைந்து மறுத்த உடல் உதயகுமரனுடயது...
எத்தனை முகம் கடந்து இருக்கிறேன் இது வரை...
எத்தனை கண்ணீர் துளிகள் கண்டு இருக்கிறேன் இது வரை...
அழகும் சிரிப்பும் அர்த்தம் இல்லாமல் ஆனது எப்படி..

நினைவில் நிற்கும் அம்மாவின் முகம்
இப்போது மழித்த தலையுடன்...
அவள் நீண்ட கருமையான கழல்
எனக்கு மிக பிடிக்கும்...
மூலிகையும் வாசமும் அவள் மணமும்
சேர்ந்து ஒரு கலவை அவள் மேல்...
தந்தை நினைவில்லை...
இறந்தார் அரசகட்டளையால்
என்று கேட்ட நொடி
என் தாய் அழகிழந்தாள்....

நொடிகொரு முறை சொல்வாள்
நான் கண்ணகியின் மகள் என்று...
அழகுக்கு மாதவி என்ற நிலை மாறி
இப்போது துறவறம் ஏந்தினாள்....
சுதாமதியுடன்...
அமைதியை வேண்டி...
புத்தனின் யோனிகளும் லிங்கங்களும் இல்லா பாதை
அவள் அலைபாய்ந்த மனதுக்கு
வழியை காட்டியிருக்க வேண்டும்...
தடம் மாறும் வயது எனக்கு...
தெளிவில்லை....

கவர்ச்சியானவள் இவளும்...
நாட்டியம் படித்தாள்...
ஜோதிடம் பார்ப்பாள்...
மணிமேகலையின் பாடல்
காதுக்குள் ஓயாமல் ஒலிக்கும் என்று கூறியவன்
உதயகுமாரன்...
ஆசையா... காதலா... காமமா...
என்று பிரித்தெடுக்க இயலாத
கண் அவனுடையது...
திகட்டும் நறுமணம் சிறிது நேரத்தில்
மூச்சடைக்க வைக்கும்...
எது வேண்டும் என தெரியாத நிலையில் நான்....
இது தான் உனக்கு என்று திணிக்க தயாராய் அவன்....

ஏற்க தான் இருந்தேன் அவன் கைகளை...
வழி இது என்று சொல்ல ஆள் இல்லாத நிலையில் நான்...
தண்டை மாற்றியதாம் என் தாயின் வாழ்வை...
இன்று கூற ஒன்றும் இல்லை என்று
வெற்றுபார்வை பார்க்கிறாள்....
எது என் பாதை கலங்கி போய் தான் இருந்தேன்.....
கண் விழித்து பார்க்கையில் தாய் மணிமேகலை
மாற்றி இருந்தாள் நான் நிற்கும் நிலத்தை...
மணிபல்லவதீவாய்!

சென்ற பிறவிப்பயனடி...
நீ செய்யவேண்டிய காரியங்கள் பல உண்டு! என்கிறாள்
தனியே விட்டு சென்றே விட்டாள்...
நடக்கிறேன்!
அழகாய் ஒரு பெண் என் முன்...
சிரிக்கிறாள் தேவதையாய் அமைதி வருட!
திவதிலகி அவள் பெயராம்...

போக சொல்கிறாள்
ரத்னதீபத்தின் தாமரைதடாகத்திற்கு!
ஆவுபுத்திரனின் அமுதசுரபிக்காக...
ரிஷபத்தின் முழுநிலவில் வெளிவரும் கிண்ணமாம்
தர்மநெறி தவறாதவர் கையில் மட்டும்
வந்து சேரும்...
போய் வா... பசியாற்று...
என்றவளும் மறைந்தேவிட்டாள்.

சென்றேன்... சுற்றி வந்தேன்
அழகிய நிலவொளியில்
சில்லென்ற நீர் பறைசாற்றும்
நான் எங்கெங்கு அழகு என்று...
தாமரை இதழ்கள் தொட்டு பார்த்து
சிணுங்கி விலகி செல்கிறது குழப்பப் பொறாமையில்...
ஒரு புதிய மலரின் தடாக வருகையால்...
என்ன தான் நடக்கும் தெரியாது நான்...

நீர் விலகி மேல் எழும்பும் கிண்ணம்
கையை நோக்கி வர...
எடுக்கிறேன் அறியாது
இனி என் பாதை திசைமாறும் என்று!
வந்த வழியே சென்றேன்...
அரவனரின் மொழி கேட்க...
தோள்களில் எத்தனை பெரிய பாரம்...
மக்களின் குறை தீர்க்கும் பிக்குணி
இவளாம்... இனி...

பசியின் வேர் பிடுங்கி
மக்களின் ஊடே இவள் பிரயாணம்...
யானை பசியோடு வந்தவள் ஒருத்தி
காயசண்டிகை!
சோற்றமுதம் தந்து
கண்ணீர் துடைத்தேன்...
காதல் மறந்தது...
கடமை புரிந்தது
உதயகுமரன் தவித்து தான் போயிருந்தான்...
பின் தொடர்கிறான் இன்னமும்
காதல் அவனிடம் சிக்கி திணறி போய்...

மனம் வலிகளை மட்டுமே பார்த்ததில்
கண் குருடாகி அகம் ஒளிர நிற்கிறேன் அவன் முன்...
இவன் திணிப்பு இப்போது உணர்கிறேன்
சலனம் மறைந்த உதட்டைக் கொண்டு!
மழித்த தலையும் உடலை மறைக்கும் துறவறம்
தாண்டியும் அவள் பெண்மை அவனை வருடியது...
இல்லை என்ற வார்த்தையை அகராதியில் காணாதவன்
இணக்கம் என்று இறுக்குகிறான் என் வாழ்வை...

அவனை மாற்ற வழி இல்லாததால்
இவள் மாறி தான் போனாள்
காயசண்டிகையாய் உருவத்தில்...
காஞ்சனன் காண்கிறான் என்னை!
வெகு நாள் கழித்து காண்கிறான் அவன் துணையின் உருவை...
இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு..
பெரும் பசியோடு விலகி சென்றவளாயிற்றே!

விளக்கங்களுக்கு நேரம் இல்லாதவளாய்
காஞ்சனன் முன் வாய் அடைத்து நான்...
மாறியது அவன் கோபம் உதயகுமரன் மேல்
மாற்றான் மனையை கொண்டான் என பெருங்கோபம்
விழிநீர் தரைதொடும் முன்
இறந்து தான் போனான் உதயன்
வசீகரத்துடன் காதல் தீய்ந்து
தரைமுழுதும் அவன் ரத்தம் தோய...

ரத்ததுளிகள் படிந்த நான் என் உருக்கொள்கிறேன்
மீண்டும் நானாக..
காஞ்சனன் கண்கள் குற்ற உணர்வில் கறுத்து...
மனம் லயிக்காமல் கால் மெதுவாய்
அழைத்துப்போக...
மரம் ஒன்று நிழல் தர அமர்கிறேன்
கண்முன் காட்சிகள் மாற
எத்தனை நாள் முன் உறங்கினாள் என்பதை மறந்து...
அயர்ந்து விழிமூடி நொந்தாள்

வறண்ட கைதொட இமை திறக்கிறேன்
தள்ளா முதுமை பசியோடு அவள் முன்
கையேந்தி!
இத்தனை பிராயாங்கள் தாண்டி ஒன்றும் இல்லாது
நிற்கும் உயிர்கள் கண்டு
என்னுள் இருந்த இறுதி கயிரும் அறுந்து போக
நிமிர்கிறேன்...
இது வரை போர்த்தி இருந்த சுவர்கள் மெல்ல
விலகி முதன்முறை உணர்கிறேன்
என் நிர்வாணம்...

தூசாகும் நிஜங்களின் முன்
என் பணி நிதர்சனமாய்...
பசி போக்கும் சுரபி கையெடுத்ததில்
மனதில் என் பாதை தெள்ள தெளிவாய்...
பெரும் கடமை பசி கொண்டு
காயசண்டிகை போல் ஆகிய மணிமேகலை
நான் நடக்கிறேன்
பிணிகளின் ஊடே...

Tuesday, January 5, 2010

புதிய பிறவிகள்...




இந்தியா சென்று வந்தது மனதெல்லாம் இன்னும் வருடியபடி இருக்க... மிகவும் யோசிக்க வைத்த விஷயங்கள் பல இருப்பினும், அதிகம் சிந்திக்க வைத்தது என் ரயில் பயணங்கள்... அரக்கோணம் எனது சொந்த ஊர். பிறந்து வளர்ந்த மண். கிராமமும் அல்லாது, நகரமும் அல்லாத ஒரு இடை நிலை. இன்னமும் வாசலில் உட்கார்ந்து போக வர உள்ளவர்களின் நலன் விசாரிக்கும் பெருசுகள் உண்டு. ஆனால் முன்பு போல் இல்லை. மார்கழி மாதம் கோலம் போட்டாப்போட்டியோடு நடந்தது நினைவில் உண்டு. இன்றோ பல வீடுகள் முன்பு சிறிய ஒரு நட்சத்திரம்... பார்ப்போர் அனைவரின் கையிலும் ஒரு தொலைப்பேசி. தெரிந்த மனிதர்கள்கூட ஏதோ ஒரு உரையாடலில் மூழ்கி மிதந்தபடி இருக்க, வெறும் ஒரு தலையசையில் நானும் உன்னைப் பார்த்துவிட்டேன் என்பதற்காக ஒரு அங்கீகாரம். இப்படி பல பல....

என் ரயில் பயணங்களுக்கு வருவோம். சென்னையை நோக்கி செல்ல ஒரு இரண்டு மணிநேரம் பிடிக்கும். வரும் ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்று நின்று செல்லும். பலத்தரப்பட்ட மக்களை சந்திக்கலாம். எனக்கு மிக பிடித்த விசயம். FM வழியே காதில் இளையராஜா குழைந்து நெஞ்சை வருட, நான் வேலை பார்த்து வசிக்கும் ஊரில் தெருவில் நடந்தால் பார்க்க நேரும் அதே கருப்பு, நீலம், வெள்ளை போன்று அல்லாது, பார்க்கும் இடம் எல்லாம் வெவ்வேறு வண்ணம். நடுநடுவே வேர்க்கடலை, இஞ்சிமரப்பா, நெய் பிச்கேட், சூடான சமோசா இப்படி பல பல... காலை நேரங்களில் ரயிலில் செல்ல நேர்ந்த போது கண்டது பெண்கள் கூட்டம். படிக்க செல்லும் இளசுகள் ஒருபுறம் இருக்க. ஒரு 80 சதவிகிதம் பெண்கள் வேளைக்கு செல்லும் பெண்கள்.

தினம் தினம் ரயிலில் செல்வதால் கூட்டம் கூட்டமாய் அடித்து பிடித்து ஒரே இடத்தில் அமர்ந்து மெல்ல நேற்றைய நிகழ்வுகள் அசைபோடும் சினேகங்கள். குளித்த தலை ஈரம் துடைக்க கூட நேரம் இல்லாது ஒடி வரும் கூட்டம். மெல்ல ரயில் நகர காலை உணவு பகிர்ந்தபடி தொடங்கியது இவர்கள் பட்டிமன்றம். வெகு நாள் ஆயிற்று கூட்டத்தின் மத்தியில் இருந்து. கண் நிமிர்ந்து பார்த்தேன் ரயில் முழுக்க உள்ள முகங்களை. எல்லார் முகத்திலும் ஒரு கலவையான உணர்ச்சி. கொஞ்சம் அசதி, எரிச்சல், தூக்கமின்மை, கோபம், சுயபச்சாதபம், ஏக்கம், வெறுப்பு எல்லாம் வேறு வேறு விகிதத்தில்.

பேச்சு முழுக்க என்ன காலை, மதிய உணவு செய்தனர், எத்தனை மணிக்கு உறங்கினர், எப்போது எழுந்தனர் என்று தொடங்கி மெல்ல கணவன்மார்கள் பக்கம் திரும்பியது. தம்தமது துணைவர்கள் பற்றி பேசும் சமயம், முகத்தில் வன்மம். கொட்டி குமுற கிடைத்த ஒரே இடம். பேசினார்கள். பேசினார்கள்... பேசிக்கொண்டே இருந்தார்கள். சில கணவர்கள் வேலை இல்லாது, சிலர் பொறுப்பு இல்லாது, சிலருக்கு வேறு பழக்கங்கள், சிலர் காசுக்காகவே. இப்படி பேசியதில் புரிந்துக்கொண்டேன். முக்கால்வாசி பெண்களிடம் காதலே இல்லை. இணக்கம் இல்லை. கடமைக்காக துணைகளுடன் இருக்கின்றனர். ஒவ்வொரு முகமும் பார்க்கும் போது எங்கேயோ தொலைந்து போனவர்கள் போன்று, முகம் இருகி கடினமாய். இந்த கூட்டம். சிலர் நடந்த சண்டை அடிதடிகள் பற்றி சொல்ல, குழந்தைகள் மாமியார் மாமனார் நாத்தனார் ஒரகத்தி என்ற ஏனய சங்கதிகளும் பேச்சில் தடம்புரண்டது...

ஒரு அளவிற்கு மேல் மனது வலித்தது. நமக்கிருப்பது ஒரு சிறிய வாழ்க்கை. விவேக் சொல்வது போல ``இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்``. இதில் தான் எத்தனை வழக்குகள். இப்படி யோசித்தே நசுங்கி கசங்கி சென்னை வந்து சேர, சில நண்பிகள் சந்தித்தும் தொலைபேசியில் உரையாடியும் சில விஷயங்கள் தெரிந்தது. பெரிய பதவிகளில் இருக்கும் பெண்களும் மிக மனம் நொந்து பேசினார்கள். பேச்சின் சாரம்சம் நான் ரயிலில் கேட்ட அதே தான். பணம், அந்த்ஸ்து, நல்ல வாழ்க்கை நிலை என்று இருந்தும் நிம்மதியில்லை. என்ன தான் நடக்கிறது என்று மெல்ல யோசித்தேன். நண்பர் செல்வாவிடம் சிறிது நேரம் facebook வழியே பேசமுடிந்தது. நெஞ்சு பொறுக்காது அவரிடம் as usual புலம்பி சோக violin வாசித்தபோது சொன்னார், இது இப்போது உள்ள எல்லா ALPHA FEMALE களின் நிலை என்று.

அமைதியாய் பின்னோக்கி பார்க்கையில் புலப்படுகிறது சில விஷயங்கள். முன்பெல்லாம் அதாவது குகைவாசிகளாக சிக்கி முக்கி கல்லோடு நெருப்பை கண்டுப்பிடித்து இருந்தபோது ஆண்கள் கூட்டமாக சென்று வேட்டையாடி வருவார்கள். குகையில் பெண்கள் குழந்தைகளையும், உணவு, பராமரிப்பு இவைகளை மேர்பார்வை பார்த்தனராம். இன்று பெண்கள் படிப்பு, வேலை, குடும்பம் என்று எத்தனை விஷயங்களை ஒரே சமயத்தில் செய்கின்றனர். 70% ஆண்கள் (மன்னிக்கவும்) வேலையில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் ஒட்டுண்ணிகளாய் தான் இருக்கிறார்கள்.

மனதிற்கு இணக்கம் இல்லாத கணவன் கிட்டினால் வாழ்வு நரகவேதனை தானே. எரிமலைகள் மேல் கணவனும் மனைவியும் அமர்ந்துக்கொண்டு, வெடிக்க யத்தனித்து, இந்த கொடுமையில் குழந்தைகளும் பெற்றுக்கொண்டு, மேலும் மேலும் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டு, ``அடக்கடவுளே!``. இந்த சூழ்நிலை ஒரு பெண்ணிற்கு எந்த விதங்களில் பாதிக்க நேரும் என்று தனியே எழுதுகிறேன், என் கருத்துகளை.

இதற்கு என்னத்தான் தீர்வு... உறவுகள் வெட்டியெறிய வேண்டியதில்லை. ஆனால் எதாவது செய்து இந்த பாவப்பட்ட பெண்களின் மனதிற்கு ஆறுதலும் உறுதுணையும் அளிக்கமுடிந்தால் இவர்களின் வாழ்வுநிலை கொஞ்சமாவது மேம்படும், அதற்கு என்ன செய்வது என்றும், எங்கு தொடங்குவது என்றும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

Monday, January 4, 2010

மறைவேன்...



கண் கொண்டு பார்க்கிறேன் உன்னை...
வா... வந்துவிடேன்...
எப்போது தான் வருவாயோ...
கேள்வி மேல் கேள்வி தாங்கி நீ...
என்னோடு கலந்து ஒன்றிவிடேன்...
அழுத்தமாய் அழைக்கிறாய்..
உயர்ந்த மலை உச்சி...
மெல்ல நடக்கிறேன்’
ஒவ்வொரு தடையையும் தாண்டி...
கன்னம் தடவும் குளிர்
எட்டும் தூரம் வரை நீ அகன்று பரந்து...
அழகாய் குதிக்கிறேன்
ஆசையாய் உன்னை நோக்கி!
மிதக்கிறேன் வெறுமையாய்...
அலையில் நுழைந்து வருகிறேன்
கரை நோக்கி திரும்ப திரும்ப...
என்னை தூக்கி சுமக்கிறாய்
இப்புறமும் அப்புறமும்
இடமும் வலமும்
மேலும் கீழும்
குறுக்கும் நெடுக்கும்
அடித்துக் களிக்கிறேன்...
குப்பையாய் மிதக்கிறேன்...
நீந்திக் களைகிறேன்...
மூழ்கி மறைகிறேன்...
நிராகரிக்கிறாயே என் ஆழ்கடலாய் இருந்தும்...
உன்னை ருசிக்கிறேன்.
உணர்கிறேன் மிக சன்னமாய்!
எங்கும் விரவி அடர் உப்பாய் நீ
நானும் உருக்கொண்டேன் உப்பு தூணாய்...
தளும்பி தளும்பி ஒய்கிறேன்
உப்பாய் மாறிய உதடுகளில் காரமாய்
உனக்கான புன்னகை...
கடல் கொண்டது
கரைத்தது...கரைகிறேன்
ஒரு துளியாய் துவங்கி ஆழ்கடலான
உன்னில் அடங்கி...
இதோ
பெருவெள்ளமான உன்னை
சிறுதுளியான என்னுள் அடக்குகிறேன்...
இப்போது தான் புரிகிறது
நான் அறிந்த ரகசியம்...