Monday, May 10, 2010

நானும் என் சுவர்களும்!!!



அறைக்குள் நுழைந்ததும்
என் சுவர்கள் என்னை இழுத்து அணைக்கிறது!
எப்படி போயிற்று இந்த தினம் என்று கேட்டபடி.

சிகப்பு சுவர் சொல்கிறது கருப்பு சுவரிடம்
இப்பதானே வந்தாள்...
செருப்பையாவது கழட்டவிடேன் என்று!

அழுகையோடு என் சுவர்களை பார்த்து சொன்னேன்
இன்றைய தினம் சுகமில்லை என்று!
எந்த சுவரிலும் சாயாது அறையின் மத்தியில் நின்று..

தினமும் என் பகல் முடிந்ததும் என் சுவர்கள்
துணையோடு தூங்குகிறேன்
என்னை அணைக்க போட்டிகளோடு தாலாட்டும் அவை!

காகிதத்தில் சிக்கா எழுத்துக்களால்...
காதுகளுக்கு போய் சேரா வார்த்தைகளால்...
பார்வையில் பதியா முகங்களால்...

என் இன்றைய தினமும் நிரம்பி வழியத்தான் செய்கிறது!
இன்னமும் வெற்றிகரமாய் வெறுமைகள் மட்டுமே
நிரப்புவேன் என் பேச்சில் மற்றவர்களிடம்!

என் நிர்வாணம், என் அழுகை, என் திமிர்,
என் திருட்டு, என் கோபம், என் பசி
எல்லாம் பார்த்தும் சுவர்களுக்கு என்மேல் தீராக்காதல்!

நிழல் உண்மைகள் எல்லாம் தெரிந்த சுவர்
என் பட்டாம்பூச்சியை கூட்டுப்புழுவாய் மாற்றும்!
இரவுகளில் என் அறை என்மேல் மடிகிறது...

வரண்ட செங்கலில் கூட எனக்கான காதல் மிச்சமிருக்க
என் நாட்களின் ஆசைகள் எல்லாம் வடியும் அவைகள் மேல்...
என்றும் காதலனாய் எனக்கு என் சுவர்கள் மட்டும் போதும்!