Tuesday, November 9, 2010

பூனையாகிறேன்!


என் வீட்டு அடுக்களையில்
தினம்தோறும் பூத்து நிற்கிறது
சிகப்பும் நீலமும் சுமக்கும் பூக்கள்!
நெருப்புக்கும் பூக்களும் நல்ல பழக்கம்...
பூத்து நிற்கும் அவைகளை ஒதுக்கியபடி
சமைப்பதே வழக்கமாகி விட்டது எனக்கு!

ஜன்னலின் வெளியே ஓங்கி வளர்ந்த மரங்கள்...
பச்சையில் தொடங்கி அடர் மஞ்சளில்
குளித்து அசையும் இலைகள்!
விடியலில் சத்தம் எழுப்பி தூக்கத்தை கலைக்கும்
மரக்கிளைகளில் குடியிருக்கும்
கருப்பில் தங்கம் தோய்த்த சிறகுகள் கொண்ட சிரிப்புகள்!

ஜன்னலின் வெளியே பறக்கும் சிரிப்புகளும்
ஜன்னலின் உள்ளே இருக்கும் பூக்களும் நானும்
சந்திக்க நேர்ந்ததே இல்லை,
திறக்காத ஜன்னல்களால்!
ஜன்னல்கள் இன்னமும் பூட்டித்தான் இருக்க,
சுவர்கள் கரைந்து போகிறது உன் முத்தங்கள் மோதி!

சுவரில்லா வீட்டில் முதன்முதலில் வசிக்கிறேன்,உன்னால்!
நானும் பூக்களும் சேர்ந்து சமைக்கும் அனைத்தும்
உனக்கான பண்டம்!
சமையல் முழுக்க என் வாசம்...
நெருப்பும் நானும் பூக்களும்
உன் கைத்தொட சுவையான பூனையாகிறோம்!

விரல் தீண்டலில் சிலிர்க்கும் ரோமமும்
திமிர் முறிக்கும் உடலும் கொண்டு
இப்போதெல்லாம் வெளியே பறக்கும் சிரிப்புகளை
அவ்வப்போது பிடித்து விழுங்கி விட்டு
நெருப்பின் கதகதப்பில், பூக்களில் சுருண்டு படுக்கிறேன்
உன் வாசம் முகர்ந்தப்படி!