Friday, February 26, 2010

மடித்து கிழிபவைகள்!



தொலைந்து கொண்டிருந்த இன்றைகளில் ஒரு நாள்
கவலையோடு பார்க்கிறேன் என் கால்களையும் அந்த விதானத்தையும்...
பழுப்பேறுகிறது சருமம் தூசியோடு!
சுற்றி முற்றிப் பார்த்து துடைக்க விழைந்தேன்...
அழுக்குகளுக்கு மத்தியில் அங்கும் இங்கும் அழகு சாயம்!
ஓவியங்கள் நிறைந்த அந்த கூடத்தில் சாயம் புதிதல்ல...

சொட்டிய நிறக்குவியல் என்றும் போல ஒதுக்கித் தள்ள முயல
ஏனோ எங்கெருந்தோ விசும்பல் மிக சன்னமாய்!
நெஞ்சுக்கூட்டைத் தொட்டு பிழிய
வெகு நாள் கழித்து அகம்விழித்தேன்...
சத்தம் வந்த வழித்தேடி போக,
மெல்ல என் கால்கள் விட்டத்தை நோக்கி!

எங்கோ ஒரு மூலையில் இருந்து வரும் முனகல்
கிழிந்து கரைந்து போகும் ஏதோ ஒன்றிலிருந்து!
என்றோ வரைந்து மறந்த ஓவியம்...
அமர்ந்து பேச ஏனோ ஆசை உந்த
நீண்ட நேரம் கழித்து உயிர் வாழ்வதாய்
எண்ண தோன்றியது நிமிடங்கள்!

ஏன்.. எப்படி... எதற்கு...
கேள்விகள் கேட்டப்படி நான் தொட!
சாயங்கள் கரைந்தவாறு சொல்லியது விட்டத்தில் சொருகப்பட்ட கதையை...
என்றோ ஒரு அழகான கதிரொளியில் புனையப்பட்டு
காரணங்கள் வெவ்வேறாக காலம் உருள
ஓவியமாகி, தடுப்பாகி, மூலையில் நிறுத்தப்பட்டு
கடைசியில் ஒழுகும் கூரையின் ஓட்டை அடைக்க நேர்ந்த நிலையை!

தொட்ட நேரம் என் கை முழுக்க சாயம் ஒட்ட
சிலிர்க்கிறேன் வெகு நாள் கழித்து!
கரைந்து சொட்டும் வண்ணங்கள் கைக்கொள்ளாது தாங்கி
விட்டத்திலே படுத்து என் மேல் வழிய சிரித்தோம்...
கிழியும் ஓரங்கள் வழியே உலகின் அத்தனை விஷயங்களும்
பேச யத்தனிக்க மனம் மின்மினியானது!
நாளையும் வருவாயா என்னோடு பேச என்று கேட்க
ஆமென்று கூறி கீழிறங்கி விடைப்பெற்றேன் ஓவியத்திடம்!

சிதிலங்கள் தொட்ட விஸ்தாரங்கள்
உடைந்து விழுந்த தடுப்புகளையும்
உளுத்து போன கதவுகளையும்
என் கால் தாண்ட இயலாது போனது!
என்றாவது எனக்கும் நினைவுக்கு வரலாம்
வண்ணம் பறிமாறிய பொழுதுகளும்..
பேசி சிரித்த கணங்களும்...
திரும்ப பார்க்க நினைத்தவைகளும்..

இப்போதைக்கு என்னால் செய்ய இயன்றது
பிரார்த்தனை மட்டுமே..
மழை இன்னும் கொஞ்ச நாள் வராது போகட்டுமே!
மீதமுள்ள வண்ணமாவது கரையாது நிற்கலாம்...
பேசவிழயும் ஓரங்கள் மக்கினாலும்
உணர வண்ணங்களாவது மிஞ்சுமே!

Sunday, February 21, 2010

உடலும் உடல் சார்ந்த என் பாலையும்...



வேட்கை தகிக்க நடக்கிறேன்...பாலை..
நடக்கும் உடல் முழுக்க முட்கள்...
வழியும் என் நீச்ச ரத்தத்தின் வாடை காற்றில் மேய
எஞ்சி நிற்கும் சருமத்தில் ஒழுகிய எச்சிலின் மிச்சங்கள்
கால் படறும் என் தரை முழுக்க ரத்தம் தோய்ந்த உதடுகள்!

உதடுகளின் சூடு பழுக்க வைக்கிறது
காலின் உட்சருமத்தை...
சூட்டுக்காக ஒதுங்க இடம் தேட
வழிமுழுக்க அலையும் கைகள் கொண்டு
நெடுநெடுத்து வளர்ந்து நிற்கும் மரதேகங்கள்...

நிழலுக்காய் ஒதுங்கி நின்றால் மரகைகளுக்குள் இருந்து
வளரும் நகங்கள் போடும் மார்பில் கீற்றுக்கோலம்!
எஞ்சிய சருமம் காக்க விலகி சென்றால்
மரகால்களாய் நின்ற வேர் தடுக்கி விடும் என் நடையை!
ரௌத்ர நிழல்களுக்கு பயந்து ஒதுங்குகிறேன் என் வெயிலில்..

கவ்வி சுவைக்கும் உதடுகளுக்கும்
எட்டி பிறாண்டும் கைகளுக்கும்
மத்தியில் நானும் என் பசியும்...
திக்கு தெரியாது தடாகங்களை தேடி போகிறோம்..
தடாகங்கள் குளிரும் யாரோ சொன்னார்கள்!

தண்ணீரில் உடல்கசடு கழுவலாம்!
தண்ணீரில் தாகம் தணிக்கலாம்!
தண்ணீரில் பிம்பம் பிரதிபலிக்கலாம்!
தண்ணீரில் மிதக்கலாம்!
தண்ணீரில் கரைந்து போகலாம் என்றும் சொல்லியிருந்தனர்!

தடாகம் இருக்கும் இடங்களில்
சக உயிர்களும் காண இயலும் என்றும் சொன்னார்கள்!
அவை மனிதமோ மிருகமோ தெரியாது இப்போது!
சலசலப்புகள் மட்டுமே கேட்கும் காதுகளுக்கு
துடிக்கும் இதயங்களின் சப்தம் கேட்கக்கூடும் முதன்முறை...

மென்மைகள் தேடும் கால்கள் சுமந்து
வழிமுழுக்க தகிக்கும் நாக்குகளுக்கு ரத்தம் சொட்டவிட்டு
தட்டுத்தடுமாறும் நடைகளோடு செல்கிறேன்...
வெடித்த கட்டாந்தரைகள் வழிகூற மறுக்கும்!
ஆர்ப்பரிக்கும் மௌனங்களும் கணக்கெடா தூரங்களும் கண்சிமிட்டும்...

முதுகில் அமர்ந்திருக்கும் கனவு மூட்டை
ஒவ்வொரு நொடியும் பிரசவிக்கும் கனவு மகவுகளை...
சிதறியோடும் ஒவ்வொன்றையும் எடுத்து
திணிக்கிறேன் மூட்டையின் உள்ளே...
நீர்தேக்கம் வரை துணை வர சொல்லி!

அடைந்தேன் குற்றுயிராய் என் இலக்கை!
கனவுகளோடு பொதிந்தேன் சில்லென...
கண்முன் எல்லாம் என்னுள்ளாக மாறுகிறேன் விதையாய்...
வளர்கிறேன் விருட்சமாய், என் கைகள் வான் நோக்கி..
நான் கடந்த மரங்களை விட மிக பிரம்மாண்டமாய்!

என் நிழல் உங்களுக்கு இதம் தரும்...
என் காற்று வறண்ட உங்களுக்கு உணர்ச்சி தரும்..
புதிய தாய்மரமாய் ஆன என்னிடம்
நீங்கள் இளைப்பாறலாம் உங்கள் பயங்கள் விடுத்து...
இன்றும் இனி எப்போதாவது இவ்வழி செல்ல நேரினும்!

Saturday, February 13, 2010

விளிம்பில்...




கேட்கிறாய் நீ
ஊஞ்சலில் பயணித்தது உண்டா என்று...
கண்மூடும் இந்நொடி நான் பறக்கிறேன்!
மேகம் நோக்கி போகையில் பிரார்த்தனை..
வானம் அடைந்து ஊஞ்சல் அங்கேயே நின்று போக!
நான் பறக்கும் என் வானம் முழுக்க
விழுதுகளாய் கயிர்...

ஒவ்வொரு கயிரும் நான் பேசி முடிக்காது
விட்ட வார்த்தைகள்..
எத்தனை தாபம்
எத்தனை ஏக்கம்
எத்தனை தீர்க்கம்
எத்தனை எதிர்ப்பார்ப்பு
பதில் இல்லா காலங்கள் வலிக்கிறது

என்ன தான் பதில் இதற்கு கேட்கிறான்
புரியாது நிற்கிறது என் ஊஞ்சல்
கேள்வி தெரிந்தால் தானே பதில்...
கேள்வியே தெரியாத காட்டில்
எந்த வேரில் இருந்து பதில் தேடி எடுக்க...
ஒவ்வொரு வேரிலும் மண்டி கிடக்கும் பதில்களை
வெறுமே பார்க்கிறேன்...

நான் கேட்டேன்
உன் ஜன்னல் சுகமா
உன் வானம் எப்படி என்று...
என் வானம் இருண்டு யானை நிறமாய்
நீலம் தொலைத்து தேடுகிறதை கூற...
சொல்வான்
அவனுடைய செவ்வானத்தை எனக்கு சிறிய
பொட்டலமாக்கி என் வழி வரும் மேகத்திடம் தருவதாய்!

தொலைக்குமோ மேகம் உன் வானத்தை.. கேட்கிறேன்.
உன் முகம் தந்து அனுப்புகிறேன் தொலைக்காது...
ஜன்னலின் பக்கமாய் காத்துக்கொண்டே இரு..
மறக்காது உன் வானத்தில் பூசிக்கொள் என்றான்..
நீயும் நானும் அருகில் இருந்தால் என்ன சொல்வோம்?
நீ கேட்க..
வார்த்தைகள் நட்டு மௌனம் முளைத்த வெளிகளில்
அமைதியோடு இருப்போம் என்கிறேன்...

நான் ரசிக்கும் அத்தனையும் நீ ரசிப்பாயோ...
கேள்வி எழந்து நம்மை பார்க்க
சுழலும் நம் பூமிகள் எதிர்பதங்கள் தான்...
என் வானம் உன் நிலம்!
உன் இருட்டு என் பகல்!
என் காற்று உன் தண்ணீர்!
உன் சிரிப்பு என் அழுகை!
இப்படி அத்தனையும் மாறி மாறி நிற்க
இத்தனையின் ஊடேவும் தொடுகிறோம்...
வானம் ஏறி நான் வர
பூமி நோக்கி நீ வர...
நம் ஊஞ்சல் பாதைகள் உறைந்து போய்..