Monday, November 2, 2009

மரணஓலம்...

என் குற்றுயிர் பிரியும் முன்
உன்னிடம் சில கேள்விகள்...
உனக்கு சில பதில்களும்...
புழுதி படிந்தும், துருவேறியும்
கனத்த மௌனத்தின் சாலையில்.
சிரிக்கும் முகமூடி நிதம் அணியும்
குரூபி நான்...
என் சிரிப்பின் சங்கீதம் எல்லோரும் ரசிக்க
என் காதில் மட்டும்
என் மரணஓலம் இரைச்சலாய்...
இருட்டில் உன்னை தேடுகிறேன்
கேள்வியோடு...
எதனால் உன் என் வார்த்தைகள்
குருதி வழிய வலியோடு
மிச்சமீதி காதலும் வற்றிபோகும்படி
சிறைப்பட்டு...
தனிமை ஜீவனை உறிஞ்சியபடி
எட்டி நின்று பார்க்க...
சதை பிடுங்கி திங்கும்
நம் சச்சரவு வல்லூறுகள்...
உன் கேள்விகளுக்கு பதில் இருந்தும்
வலியின் உச்சத்தில்
விடைகள் மறுத்து...
அன்பு மட்டுமே தேடி
உனக்காக சோகமூட்டை சுமந்த அகதி நான்
எப்படி மறந்தாய் இதை...
சிரிப்பும் அணைப்பும் நிறைந்த
நினைவுகள் பழுப்பேறி போய்...
உன் குற்றச்சாட்டு குரல் கேட்கையில்
என் இத்தனை நாள் வாழ்வும்
ஆயிரம் பேர் பார்க்க
கழு ஏறுவதை உணர்கிறேன்...
என் அன்பாய் இருந்தவனே
உள்ளுக்குள் கொப்பளிக்கும் என் கோபத்தின்
உச்சத்தில் இதோ அறுக்கிறேன்
இறக்கும் கணத்திலும்
என் உதடுகளை....
உயிர் பிரிந்தாலும் என் முகம்
நீ பார்த்து மனம் கனத்து
உன் கோப வெறுப்புகள் மறந்து
முத்தமிட்டு வழியனுப்ப நினைத்தால்
உதடுகள் அற்ற என் கோர முகம் வரவேற்கும்
என் வலி விகாரம் காட்டி...

3 comments:

Marie Mahendran said...

உன் கேள்விகளுக்கு பதில் இருந்தும்
வலியின் உச்சத்தில்
விடைகள் மறுத்து...
அன்பு மட்டுமே தேடி
உனக்காக சோகமூட்டை
சுமந்த அகதி நான்...

வர்ணங்களின் ஜாலங்கள் எல்லாம்
என்னிடமிருந்தும் பிடுங்கப்பட்டு விட்டது தோழி..
வெற்றுசதையுடன் காலத்தின்
ஈர்ப்பை தினம் அநிவிக்கும்
சுயம் தொலைத்த நாளில்
இருப்பின் வாசலை திறந்து அழைக்கின்றது உன் கடைசி கரங்கள்..

பாதலின் தாள லயம் மாறிய
ஓர் தெருபாடகனின் வார்த்தைகளுடன்
குறைந்தபட்சம் அன்பின் அரவணைப்பை தேடி உன் பாடல்
அகதியன் மனதில்
புல்லாங்குழலின் ஆழ்ந்த உள்ளோடும்
ஆத்மீகத்தை அழ செய்கின்றது..
மழை நின்ற எனது பொழுதின்
வாசலில் உன் குடை மட்டும்
விரிந்தும் சுருங்கியும் ஒரு முன்னறிவிப்பமற்ற
உடைசலாக மழை கோடுகள்
ஈரத்தின் அனலில் நினைவுகளை
உன் வரிகளுடன் இனைக்கின்றது..
கவிதைகளால்
இனைக்கப்படும் வாழ்வின் அசைவை
நீ
எங்கனம் சென்று பிரிக்கவுள்ளாய்..?

கவிதைகளுடன் மட்டுமே வாழ்வு
தீர்ந்திடுமா தோழி..
சொல்...?

ISR Selvakumar said...

”இதுவும் கடந்து போகும்”

இந்த மூன்று வரிகளை ஞாபகத்திலும் கருத்திலும் வைத்துக் கொள்ளவும்.

ஒரு அன்புச் சகோதரனாய் சொல்கின்றேன். இந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியும்போது, வாழ்வின் மிகக் கடினமான துயரங்களைக் கடந்திருப்போம்.

Imagination said...

Sweety please :( what's going on?